செய்திகள்
ஜேசு அந்தோணிராஜ்

வளர்ப்பு தந்தையால் உயிரோடு எரிக்கப்பட்ட சிறுமி பலி - கொலை வழக்காக மாற்றம்

Published On 2021-11-20 03:58 GMT   |   Update On 2021-11-20 03:58 GMT
நெல்லை அருகே வளர்ப்பு தந்தையால் உயிரோடு எரிக்கப்பட்ட சிறுமி பலியான சம்பவத்தையடுத்து இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பணகுடி:

கன்னியாகுமரி மாவட்டம் பெரியவிளையை சேர்ந்தவர் ஜேசு அந்தோணிராஜ் (வயது45), கூலித்தொழிலாளி. இவர் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒரு மகனும், 2 மகள்களுடன் வசித்து வந்த சுஜா (33) என்பவரை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஜேசு அந்தோணிராஜ் 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஜேசு அந்தோணி ராஜ், சுஜா மற்றும் குழந்தைகளுடன் நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல் கிணறு பாரதி நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். அங்குள்ள ஒரு ஓட்டலில் கணவன்-மனைவி வேலை பார்த்து வந்தனர்.

இந்நிலையில் சுஜாவின் கடைசி மகள் மகேஷ்வரி (10) நேற்று முன்தினம் அங்குள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். அப்போது அந்த கடையில் இருந்து தின்பண்டத்தை எடுத்து வந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கடைக்காரர், அந்தோணி ராஜிடம் தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அந்தோணிராஜ் வீட்டில் இருந்த சிறுமி மகேஸ்வரியின் தலையில் மண்எண்ணையை ஊற்றி உயிரோடு தீ வைத்தார். அலறி துடித்த மகேஸ்வரி வலி தாங்க முடியாமல் அந்தோணி ராஜை கட்டி பிடித்தாள்.

இதில் அந்தோணிராஜ் உடலிலும் காயம் ஏற்பட்டது. இவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுகுறித்து பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாய சாந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வந்த சிறுமி மகேஸ்வரி உடல்நிலை மிகவும் மோசம் அடைந்து காணப்பட்டது.

நேற்று நள்ளிரவு மகேஸ்வரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தாள். அந்தோணி ராஜ் உடல் நலம் தேறி வருகிறார். இதையடுத்து போலீசார் வழக்கை, கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News