செய்திகள்
பொதுமக்கள் சிரமத்தை தவிர்க்க வீரபாண்டி வி.ஏ.ஓ.,வை தொடர்பு கொள்ள ஏற்பாடு
மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ள வி.ஏ.ஓ., மற்றும் வருவாய் ஆய்வாளர்களை நேரில் சந்தித்து ஒரு தகவல், சான்று பெறுவது பெரும் சிரமம்.
திருப்பூர்:
அரசு அலுவலகங்கள் என்றாலே எந்த பணியும் தாமதமாவதும், உரிய அலுவலர் இன்றி ஒரு வேலைக்காக அடிக்கடி பொதுமக்கள் சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வருவதும் வாடிக்கையானது. உரிய பிரிவு அலுவலரை தொடர்பு கொண்டு பேச செல்போன் எண்களை தருவதும் மிகவும் குறைவு.
குறிப்பாக அடிக்கடி களப்பணி அல்லது உயர் அதிகாரிகள் சந்திப்புக்கு சென்று விடும் வருவாய்துறை சார்ந்த அலுவலர்களை பார்த்து ஒரு வேலை முடிப்பது என்பது குதிரை கொம்பாக உள்ளது. அவ்வகையில் மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ள வி.ஏ.ஓ., மற்றும் வருவாய் ஆய்வாளர்களை நேரில் சந்தித்து ஒரு தகவல், சான்று பெறுவது பெரும் சிரமம்.
இது போன்ற அலுவலர்கள் அதிகளவில் களப்பணி அல்லது உயர் அதிகாரிகள் சந்திப்பு என செல்லும் நிலையில் அவர்களைச் சந்திக்க வருவோர் அலுவலக வாயிலில் கால்கடுக்க காத்து நின்று திரும்புவது சகஜமாக உள்ளது.
உரிய அலுவலகம் முன்புறம் தகவல் பலகை இருந்தாலும் முகாம் செல்லும் இடம், உத்தேசமாக திரும்ப வரும் நேரம், உரிய அலுவலரை தொடர்பு கொள்ள செல்போன் எண்ணும் தெரியப்படுத்தப்படுவதில்லை. அப்படியே எழுதினாலும் சாக்பீஸ் கொண்டு எழுதுகின்றனர்.
ஆனால் இதில் திருப்பூர் வீரபாண்டி வி.ஏ.ஓ., அலுவலக வாயிலில் தற்போது வி.ஏ.ஓ., பெயர், தொடர்பு எண் பெயின்ட்டில் எழுதப்பட்டு முகாம் குறித்த தகவல் எழுதவும் இடம் விடப்பட்டுள்ளது. இதேபோல் அனைத்து அலுவலங்களிலும் பின்பற்றினால் பொதுமக்களுக்கு அலைச்சல் குறையும் என சமூகஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.