செய்திகள்
குட்கா கடத்தல் வழக்கில் கைது செய்யபட்டவர் - பறிமுதல் செய்யபட்ட குட்கா பொருட்கள்

பஸ்சில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தியவர் கைது

Published On 2021-09-22 07:38 GMT   |   Update On 2021-09-22 07:38 GMT
விழுப்புரம் அருகே பஸ்சில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தியவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம்:

தமிழகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்பட 9 மாவட்டங்களில் வருகிற அக்டோபர் 6 மற்றும் 9-ந் தேதிகளில் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

இதையடுத்து அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் பொருட்டு பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் விழுப்புரம் பகுதியில் பறக்கும்படை அதிகாரியும், தனிவட்டாட்சியருமான தயாளன் தலைமையிலான பறக்கும் படையினர் விழுப்புரம்- திருவண்ணாமலை சாலையில் உள்ள அடுக்கம் என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த பஸ்சை பறக்கும் படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். பின்னர் அந்த பஸ்சில் ஏறி பயணிகள் வைத்திருந்த பைகளை சோதனை செய்தனர்.

அப்போது பயணி ஒருவர் வைத்திருந்த பைகளை சோதனை செய்தபோது அவர் தடை செய்யப்பட்ட 4 ஆயிரம் குட்கா பாக்கெட்டுகளை கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து குட்கா வைத்திருந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் விழுப்புரம் அருகே உள்ள தோகைப்பாடி பகுதியை சேர்ந்த சுரேஷ்(வயது 42). என்பதும் இவர் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளை கடத்தி சென்று பதுக்கி வைத்து விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேசை கைது செய்தனர். அவரிடமிருந்து குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யபட்டது.
Tags:    

Similar News