செய்திகள்
இது ஒரு நாடு, இது ஒரு தேர்வு, இந்த வணிக நாடகத்தை அரங்கேற்ற ஒரு அரசு: கொந்தளித்த கமல் ஹாசன்
ராஜஸ்தான் மாநிலத்தில் நீட் தேர்வு முறைகேடு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
இந்தியா முழுவதும் நேற்று முன்தினம் நீட் தேர்வு நடைபெற்றது. நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு போராடி வருகிறது. ஆனால் மத்திய அரசு தமிழக அரசின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. தேர்வின்போது தமிழகத்தில் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது. ஆனால், வெளிமாநிலங்களில் முறைகேடு எளிதாக நடக்கிறது. ஜெய்ப்பூரில் 35 லட்சம் ரூபாய்க்கு நீட் தேர்வின் வினாத்தாள்கள் வினியோகம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேவேளையில், தமிழகத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ‘‘ஜெய்ப்பூரில் 35 லட்சம் ரூபாய்க்கு நீட் தேர்வின் வினாத்தாள்கள் வினியோகமாகிக் கொண்டிருக்க இங்கே தனுஷ், கனிமொழி போன்ற அப்பாவி மாணவர்கள் தங்கள் இன்னுயிரை நீத்துக்கொண்டிருக்கிறார்கள். இது ஒரு நாடு, இது ஒரு தேர்வு, இந்த வணிக நாடகத்தை அரங்கேற்ற ஒரு அரசு.சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்!’’ என கடும் விமர்சனத்தை வைத்துள்ளார்.
இதையும் படியுங்கள்... மேல்சபை எம்.பி. தேர்தல்: தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு