செய்திகள்
2 ஜிபி இலவச டேட்டா திட்டத்தை செயல்படுத்த வேண்டும் - கமல்ஹாசன் வலியுறுத்தல்
ஏழை மாணவர்கள் நலன் கருதி ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதற்காக 2 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கும் திட்டத்தை கடந்த அ.தி.மு.க. அரசு கொண்டு வந்தது.
சென்னை:
கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க கடந்த அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த 2 ஜிபி இலவச டேட்டா திட்டத்தால் லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைந்தனர்.
அந்தத் திட்டம் தற்போது முடிவடைந்திருப்பதால் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டிலும் ஆன்லைன் வகுப்பு முறையே தொடரும் நிலையில், இலவச 2 ஜிபி டேட்டா திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என கல்லூரி மாணவ, மாணவிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், 2 ஜிபி இலவச டேட்டா திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வகுப்புகள் இணைய வழியிலே நடக்கும் சூழல் இருப்பதால், 2 ஜிபி இலவச டேட்டா திட்டம் செயல்படுத்த வேண்டும் எனும் மாணவர்களின் கோரிக்கை நியாயமானது. கல்வி நிலையங்கள் திறக்கும் வரை தமிழக அரசு இலவச டேட்டா வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.