கோவையில் 10 நாளில் கொரோனா முழுமையாக குறையும்- சுகாதாரத்துறை துணை இயக்குனர் தகவல்
கோவை:
கோவை மாவட்டத்தில் மார்ச் மாத இறுதியில் தொடங்கிய கொரோனா 2-வது அலை கடந்த மே மாதம் உச்சத்தை அடைந்தது. மே மாதத்தில் மட்டும் 90 ஆயிரத்து 828 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மேலும் 551 பேர் பலியாகினர்.
இந்த நிலையில், இந்த மாத தொடக்கத்தில் இருந்து கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. அதன்படி, தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2,200-க்கு கீழ் வந்துள்ளது.
மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு பயனாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், இந்த பாதிப்பு எண்ணிக்கை அடுத்த பத்து நாட்களில் மேலும் குறையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில் குமார் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால், மருத்துவமனைகளில் ஏராளமான படுக்கைகள் காலியாக உள்ளன. 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களை கண்டறிந்து மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்து வருகிறோம். மேலும், வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கையையும் தற்போது குறைத்து உள்ளோம்.
இதையும் படியுங்கள்.... கோவை அருகே ஒரே பகுதியில் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
அரசு எடுத்த நடவடிக்கைகளால் கொரோனா தொற்று பாதிப்பும், பலி எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளது.
எனவே, மாவட்டத்தில் அடுத்த 10 நாட்களில் கொரோனா பாதிப்பு முழுமையாக குறையும். தொடர்ந்து நகர் மற்றும் புற நகர் பகுதியில் தடுப்பு பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.