செய்திகள்
கோப்பு படம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வீணாக சுற்றித் திரிபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்- போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

Published On 2021-05-24 10:32 GMT   |   Update On 2021-05-24 10:32 GMT
ஊரடங்கு காலகட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு தேவையான மருத்துவ வசதி, உணவு, பாதுகாப்பு, அறிவுரை ஆகியவற்றை போலீசார் வழங்க உள்ளனர்.

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 235 மூத்த குடிமக்கள் வசிக்கின்ற வீடுகள் கண்டறியப்பட்டு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக ரோந்து போலீசார் தினமும் அங்கு சென்று வருகிறார்கள்.

இதற்காக அவர்கள் தங்குமிடங்களில் பட்டா புத்தகம் வைக்கப்பட்டுள்ளது.இப்போதைய ஊரடங்கு காலகட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு தேவையான மருத்துவ வசதி, உணவு, பாதுகாப்பு, அறிவுரை ஆகியவற்றை போலீசார் வழங்க உள்ளனர்.

மேலும் இதற்காக பிரத்தியேகமாக ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் 94981 80972 என்ற எண் இந்த சேவைக்காக தொடங்கப்பட்டு இருக்கிறது. மூத்த குடிமக்கள் மட்டுமின்றி ஏனைய பொது மக்களும் ஊரடங்கு பற்றிய விவரங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் மேற்கண்ட எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இன்று முதல் தொடங்க உள்ள முழு ஊரடங்கு நேரத்தில் காய்கறிகள், மளிகை பொருட்கள், இறைச்சி ஆகியவற்றை வாங்க பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். பொருட்களை வீடுகளிலும் தெருக்களிலும் வந்து விற்பனை செய்ய ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

தகுந்த காரணங்களின்றி வெளியே வரும் பொதுமக்கள் மற்றும் வீணாக சுற்றி திரியும் நபர்கள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். மேலும் விதிமுறைகளை மீறி வருகின்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும்.

தகுந்த காரணங்களோடு வெளியே வரும் பொதுமக்கள் கூட முக கவசம் அணிந்து தகுந்த சமூக இடைவெளியில் தங்கள் வேலைகளை முடித்துவிட்டு உடனடியாக வீடுகளுக்கு திரும்ப வேண்டும்.

இவ்வாறு எஸ்.பி. சிவகுமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News