செய்திகள்
தற்கொலை

வால்பாறை நகராட்சி ஊழியர் வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2021-04-26 11:58 GMT   |   Update On 2021-04-26 11:58 GMT
வால்பாறை நகராட்சி ஊழியர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


திண்டுக்கல் மாவட்டம் போடிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜான்சன் (வயது 46). இவர் கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் தூய்மை ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.

ஜான்சனுக்கு கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக கடந்த வெள்ளிக்கிழமை வேலூர் வந்தார். ஆற்காடு சாலையில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினார்.

ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டு மீண்டும் அறைக்கு வந்த அவர் பின்னர் வெளியே வரவில்லை.

2 நாட்களாக அறை கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் நேற்று இரவு கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு ஜான்சன் வாயில் நுரை தள்ளியபடி இறந்துகிடந்தார். அவரது அருகில் வி‌ஷ பாட்டில் ஒன்று கிடந்தது. இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். ஜான்சன் பிணமாக கிடந்த அறையில் அவர் எழுதிய கடிதம் இருந்தது. அதில் எனக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் உயிர் வாழ விரும்பவில்லை. என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. நானே பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போடிநாயக்கனூரில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News