திண்டுக்கல் அருகே மணல் திருட்டில் கைதான வாலிபருக்கு கொரோனா
ஆத்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தபோது, அனுமதியின்றி டிராக்டரில் மணல் அள்ளி வந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். அவர் திருட்டுத்தனமாக மணல்அள்ளி வந்தது தெரியவரவே டிராக்டரை பறிமுதல் செய்து அழகர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த 19 வயது வாலிபரை கைது செய்தனர்.அவரை ஆத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் வேடசந்தூர் சிறையில் அடைக்க முடிவு செய்தனர். முன்னதாக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அந்த வாலிபருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து அவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து அந்த வாலிபரை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். இன்று செம்பட்டி போலீஸ் நிலையம் முழுவதும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது.
வாலிபரிடம் விசாரணை நடத்திய போலீசாரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வேடசந்தூர் சிறையில் அவர் ஒரு நாள் அடைக்கப்பட்டதால் சிறையில் உள் மற்ற கைதிகளுக்கும் தொற்று இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.