செய்திகள்
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.25 லட்சம் மோசடி செய்தவர் கைது
பூந்தமல்லி அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
பூந்தமல்லி:
சோழிங்கநல்லூரை சேர்ந்தவர் சங்கர் (வயது56). இவருடைய மகனுக்கு கடந்த ஆண்டு அரசு வேலை வாங்கி தருவதாக கொரட்டூர் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (72), அவருடைய மகன் ராஜூவ் (38) ஆகிய இருவரும் ஆசை வார்த்தைகள் கூறினர்.
இதற்காக சங்கரை அமைந்தகரைக்கு வரவழைத்து ரூ.25 லட்சம் வாங்கி உள்ளனர். ஆனால் அதன்பிறகு சொன்னபடி அரசு வேலை வாங்கி தராமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சங்கர் பலமுறை கேட்டும் பதில் ஏதும் சொல்லாமல் அலைக்கழித்து வந்தனர். வேலை வாங்கி தராவிட்டால் தான் கொடுத்த ரூ.25 லட்சத்தை திருப்பி தரும்படி கேட்டார். ஆனால் அதற்குள் அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை.
இது மோசடி தொடர்பாக சங்கர் அமைந்தகரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ராஜூவை கைது செய்து விசாரித்தனர். அதில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி சங்கரிடம் பணம் வாங்கி மோசடி செய்ததை ஒப்புக்கொண்டார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.