search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cash fraud"

    காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ஊழியர்களே பண மோசடி செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மதுரை:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாரதி நகரை சேர்ந்தவர் சக்திவேல். இவர் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் சூப்பிரண்டாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் மகன் மற்றும் உறவினர்களுக்கு வேலை தேடி வந்தார்.

    இந்த நிலையில் மதுரை காமராஜர் சாலை வடிவேல் நகரைச் சேர்ந்த சங்கர் (வயது 52), நாகமலை புதுக்கோட்டை பார்த்தசாரதி ஆகியோர் சக்திவேலை தொடர்பு கொண்டனர்.

    அப்போது சங்கர், “நான் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மொழி பெயர்ப்பாளராக வேலை பார்த்து வருகிறேன். என்னுடன் பார்த்தசாரதியும் பணிபுரிந்து வருகிறார்.

    எங்களுக்கு துணை வேந்தர் அலுவலக வட்டாரத்தில் அதிகாரிகள் பலரை தெரியும். பல்கலைக் கழகத்தில் கிளார்க், டைப்பிஸ்ட் பணியிடங்கள் காலியாக உள்ளன. நீங்கள் பணம் கொடுத்தால் உங்களது மகன் மற்றும் உறவினர்களுக்கு வேலை வாங்கி தருகிறோம்“ என்று ஆசைவார்த்தை கூறினர்.

    இதனை நம்பிய சக்திவேல் பணத்துடன் மதுரைக்கு வந்தார். அப்போது அவரை சங்கர், பார்த்தசாரதி ஆகியோர் மாவட்ட கோர்ட்டு அருகே சந்தித்தனர்.

    அப்போது சக்திவேல் அவர்களிடம் ரூ.13 லட்சத்து 90 ஆயிரத்தை கொடுத்தார். இதனை பெற்றுக் கொண்ட இருவரும் பல்கலைக் கழகத்தில் வேலை வாங்கித் தரவில்லை. எனவே சக்திவேல் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார். அப்போது சங்கரும், பார்த்தசாரதியும் பணத்தை தராமல் இழுத்தடித்தனர். இதுகுறித்து மதுரை மாநகர போலீசில் சக்திவேல் புகார் செய்தார்.

    மாநகர போலீஸ் கமி‌ஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின்பேரில் மதுரை வடக்கு போலீஸ் துணை கமி‌ஷனர் ராஜசேகர், அண்ணாநகர் உதவி கமி‌ஷனர் சூரக்குமார் மேற்பார்வையில், அண்ணாநகர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தினர்.

    காமராஜர் பல்கலைக் கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.13 லட்சத்து 90 ஆயிரம் மோசடி செய்த பல்கலைக்கழக ஊழியர் சங்கரை போலீசார் கைது செய்தனர்.

    காமராஜர் பல்கலைக் கழகத்தில் பார்த்தசாரதி சில மாதங்களுக்கு முன்பு வரை வேலை பார்த்தார். அவரை பல்கலைக்கழக நிர்வாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தற்காலிக பணி நீக்கம் செய்தது.
    வேலை வாங்கித்தருவ தாக ரூ.4 லட்சம் மோசடி செய்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    மதுரை:

    மதுரை ஆனையூர் ஆபீசர் டவுண் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 63). இவரிடம் திருமங்கலம் அசோக் நகரைச் சேர்ந்த பாலாஜி (33), அவரது மனைவி யாகினி, துரை (65), அவரது மனைவி லட்சுமி (60), விராட்டிப்பத்தைச் சேர்ந்த நாகேந்திரன் (40) ஆகிய 5 பேரும் ராஜேந்திரனின் மகனுக்கு வருமானவரித்துறையிலும், மருமகளுக்கு வங்கியிலும் வேலை வாங்கித்தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.5,75,000 பெற்றுள்ளனர்.

    பல மாதங்கள் ஆகியும் வேலை வாங்கித்தரவில்லை. இதனால் ராஜேந்திரன் கொடுத்த பணத்தை திருப்பித்தருமாறு கேட்டார். அவர்கள் 5 பேரும் 2 தவணைகளில் ரூ.1,65,000 திருப்பிக் கொடுத்து விட்டு மீதித்தொகை ரூ.4 லட்சத்தை தராமல் காலம் கடத்தி வந்துள்ளனர். ராஜேந்திரனுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

    இது குறித்து ராஜேந்திரன் மதுரை மாவட்ட குற்றப் பிரிவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாக்கியலட்சுமி, சம்பந்தப்பட்ட பாலாஜி, யாகினி, துரை, லெட்சுமி, நாகேந்திரன் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    மெலட்டூர் அருகே விவசாயிடம் வங்கி அதிகாரிபோல பேசி ரூ.24ஆயிரம் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மெலட்டூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா மெலட்டூர் அருகே உள்ள கரம்பை கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். விவசாயியான இவர் மெலட்டூரில் உள்ள ஒரு வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார்.

    கார்த்திகேயனிடம் செல்போனில் பேசிய ஒருவர், வங்கி மேலாளர் பேசுவதாக கூறி உங்கள் வங்கி கணக்குக்கான ஏ.டி.எம். காலாவதியாகிவிட்டது. இதனை மாற்ற வேண்டும் என கூறியுள்ளார். அதற்காக ஏ.டி.எம். கார்டை புதுப்பிக்க பின் நம்பரையும், அடுத்துவந்த ஓடிபி நம்பரையும் கூறுமாறு கேட்டுள்ளார்.

    இதனை நம்பிய கார்த்திகேயன் நம்பரை கூறியுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் கார்த்திகேயன் செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். வங்கி சேமிப்பு கணக்கில் இருந்த ரூ.23 ஆயிரத்து 500 எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. கார்த்திகேயன் தனது வங்கி கணக்கை சரிபார்த்தபோது ரூ.23ஆயிரத்து 500 டெல்லியில் உள்ள ஒருவரது வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது.

    இச்சம்பவம் குறித்து மெலட்டூர் போலீஸ் நிலையத்திலும், மாவட்ட எஸ்.பி.யிடமும் கார்த்திகேயன் புகார் செய்தார்.

    நெல் அறுவடை செய்த பணத்தில் செலவு போக மீதி இருப்பு தொகை ரூ.24ஆயிரம் இருந்தது. அதனை விவசாயி பறிகொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வங்கிக்கு கொடுக்கப்பட்ட செல்போன் நம்பர் மோசடி கும்பலுக்கு எப்படி கிடைத்தது? வங்கி ஊழியர்களுக்கும் ஆன்லைன் மோசடி கும்பலுக்கும் தொடர்பு உள்ளதோ? என சந்தேகம் எழுகிறது. பணம் எடுக்கப்பட்டது குறித்து விபரம் கேட்க போன என்னை பார்த்து தனியார் வங்கி ஊழியர்கள் சிரித்ததன் அர்த்தம் என்னவாக இருக்கும் என கேள்வி எழுப்பினார்.

    இதேபோன்று கடந்த மார்ச் மாதம் 11-ந்தேதி பாபநாசம் தாலுக்கா மேல் செம்மங்குடி கிராமத்தை சேர்ந்த நாராயணசாமி என்பவர் வங்கி கணக்கில் இருந்து 35ஆயிரம் பணத்தை ஆன்லைன் மோசடி கும்பல் எடுத்துள்ளது அதுவும் விவசாயிகளை குறிவைத்து மோசடி கும்பல் தொடர்ந்து இதுபோன்ற பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் முறையாக நடவடிக்கை எடுக்கவும், வங்கிகள் வாடிக்கையாளர் பணத்தை பாதுகாக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்தால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்களை தடுக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    தஞ்சை மாவட்டத்தில் ஏ.டி.எம். கார்டு காலாவதியாகி விட்டது என்று கூறி விவசாயியிடம் ரூ.35 ஆயிரம் மோசடி செய்த சம்பவம் நடந்துள்ளது.

    மெலட்டூர்:

    காலத்துக்கேற்ப மோசடியில் புதுபுது யுக்திகளை கையாள்கின்றனர். படிக்காத பாமர மக்களிடம் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க உதவுகிறோம் என்று நடித்தும் வங்கியில் இருந்து பேசுகிறோம் என்று ஏ.டி.எம். ரகசிய எண்களை அறிந்தும் மோசடியில் ஈடுபடும் கும்பல் தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டி வருகிறது.

    இதுபற்றி பொதுமக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாததால் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் ஏ.டி.எம். கார்டு காலாவதியாகி விட்டது என்று கூறி விவசாயியிடம் ரூ.35 ஆயிரம் மோசடி செய்த சம்பவம் நடந்துள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மேலசெம்.மங்குடியைச் சேர்ந்தவர் நாராயணசாமி. விவசாயி.

    இவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் உங்களது வங்கி ஏ.டி.எம் காலாவதியாகிவிட்டது. அதனை மாற்ற வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு நாராயணசாமியும் நான் வங்கிக்கு சென்று மாற்றிக் கொள்கிறேன் என கூறியுள்ளார். ஆனால் செல்போனில் பேசியவர் அவருடைய ஏ.டி.எம். பின் நம்பரை கேட்டுள்ளார், நாராயணசாமியும் பின் நம்பரை கொடுத்துள்ளார்.

    பின்னர் அம்மாபேட்டையில் உள்ள வங்கி கிளைக்கு சென்று ஏ.டி.எம். காலாவதியாகி விட்டது குறித்து வங்கி மேலாளரிடமும், தனக்கு வந்த செல்போன் தகவலையும் கூறியுள்ளார். அதற்கு உங்களது வங்கி கணக்கில் தற்போது பணம் இருப்பு இல்லை, பணம் வந்ததும் வாருங்கள் என கூறி அனுப்பிவிட்டார்.

    இந்நிலையில் நெல்அறுவடை செய்து அதனை கொள்முதல் நிலையத்தில் விற்ற தொகை ரூ.1 லட்சத்து 800 நேற்று காலை நாராயணசாமி வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

    இதனை அறிந்த நாராயணசாமியும் பாபநாசம் சென்று ஏ.டி.எம். மூலம் ரூ. 20 ஆயிரம் ரொக்கத்தை எடுத்தார். பணம் எடுத்த சிறிது நேரத்தில் நாராயணசாமியின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது. வங்கியிலிருந்து வருவதாக நினைத்து வங்கிக்கு சென்று, அங்கு தன்னுடைய சேமிப்பு கணக்கு புத்தகத்தினை வரவு செலவை பிரிண்ட் எடுத்த போது, நாராயணசாமிக்கே தெரியாமல் அவருடைய கணக்கில் இருந்து ஐதராபாத்தில் இருந்து முதலில் ரூ.5 ஆயிரம், பின்னர் ரூ.9999, பின்னர் ரூ.20 ஆயிரம் என மொத்தம் ரூ.34,999 ஐ ஆன்லைன் மூலமாக எடுத்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தன்னுடைய வங்கி கணக்கை முடக்கி வைத்தார்.

    பின்னர் வங்கி கிளையிலும், மெலட்டூர் போலீஸ் நிலையத்திலும் இது தொடர்பாக நாராயணசாமி புகார் செய்தார். #tamilnews

    ஐ.ஏ.எஸ். அதிகாரி மற்றும் ரெயில்வே துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ. 24½ லட்சம் மோசடி செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    போரூர்:

    கடலூர் மாவட்டம் கூத்தப்பாக்கம் பெருமாள் நகரைச் சேர்ந்தவர் சதாசிவம் தொழில் அதிபர். இவர் அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

    என்னுடைய நண்பர் மூலம் எனக்கு மாயவரம் பசுபதி அகரத்தைச் சேர்ந்த மணி வெங்கடகிருஷ்ணன் என்பவர் அறிமுகமானார் மணி வெங்கடகிருஷ்ணன் தனக்கு டெல்லியில் மத்திய அரசின் பல துறை அதிகாரிகள் உடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக என்னிடம் அடிக்கடி கூறி வந்தார்.

    என்னுடைய மகள், மகன் ஆகிய இருவருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரி மற்றும் ரெயில்வே துறையில் ஸ்டே‌ஷன் மாஸ்டர் வேலை வாங்கி தருவதாக என்னிடம் உறுதி அளித்தார்.

    இதற்காக மணி வெங்கட கிருஷ்ணன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அண்ணா நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் வைத்து என்னிடம் இருந்து இரண்டு தவணையாக மொத்தம் ரூ.24 லட்சத்து 50ஆயிரம் பெற்று கொண்டார். ஆனால் இதுவரை வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி தராமல் தலைமறைவாகி விட்டார்.

    வேலை வாங்கித் தருவதாக ரூ. 24½ லட்சம் மோசடி செய்த மணிவெங்கடேசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    தருமபுரியில் வாலிபரிடம் நகை கடை அதிபர் ஒருவர் ரூ.17 லட்சம் கடனுக்கு வாங்கிவிட்டு மனைவியுடன் தலைமறைவாகி விட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    தருமபுரி:

    தருமபுரி சூடாமணி தெருவைச் சேர்ந்தவர்குமார் (வயது 46). இவரது மனைவி நீலா. கடைவீதி பகுதியில் குமார் சொந்தமாக நகை கடை வைத்து நடத்தி வந்தார்.

    இவர் தருமபுரியை அடுத்த பழையதருமபுரி பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் வேலவன் என்பவரிடம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நகை கடையில் ஏற்பட்ட இழப்பை சரி செய்ய ரூ.17 லட்சம் கடனாக வாங்கினார்.

    கடன் வாங்கி 2 மாதங்களில் திருப்பி தருவதாக கூறிய குமார் பணத்தை திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்தார். வேலவன் பலமுறை குமாரிடம் சென்று கேட்டபோது, பணம் தராமல் இழுத்தடித்து வந்தார்.

    கடந்த ஆகஸ்ட் மாதம் 19-ந் தேதி அவரது வீட்டிற்கு சென்று மீண்டும் பணத்தை திருப்பி தருமாறு வேலவன் கேட்டார். அப்போது அவரும், அவரது மனைவியும் வேலவனை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியும், கொலை மிரட்டல் விடுத்தும் திருப்பி அனுப்பினர்.

    இதுகுறித்து தருமபுரி டவுன் போலீசாரிடம் வேலன் புகார் தெரிவித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததாக தெரியவந்தது.

    இதனால் விரக்தியடைந்த அவர் ரூ.17 லட்சம் பணத்தை குமாரிடம் இருந்து மீட்டு தருமாறு தருமபுரி குற்றவியல் நீதிமன்றத்தில் வேலவன் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை நீதிபதி ஜீவாபாண்டியன் விசாரித்து குமார் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிக்க உத்தரவு விட்டார். நீதிபதி உத்தரவிட்டதன் பேரில் தருமபுரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் வேலவனிடம் பணம் மோசடி செய்த குமார் மற்றும் அவரது மனைவி மீது வழக்கு பதிவு செய்தார்.

    மேலும் கணவன்- மனைவி 2 பேரையும் விசாரிக்க போலீஸ் நிலையத்திற்கு அவர்களை அழைத்து வர குமார் வீட்டிற்கு போலீசார் சென்றனர்.

    அங்கு குமாரும், அவரது மனைவி நீலாவும் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டது தெரியவந்தது. பணம் மோசடி செய்து விட்டு தலைமறைவாக உள்ள கணவன்- மனைவி 2 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். #tamilnews
    மதுரையில் வங்கி கடன் பெற்று தருவதாக கூறி பெண்களிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்ததாக தாய்-மகன் கைது செய்யப்பட்டனர்.
    மதுரை:

    மதுரை கரிமேடு பாரதியார் மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி காந்தி மீனாட்சி (வயது24). இவரும், ஆரப்பாளையம் கருப்பைதோப்பு பகுதியை சேர்ந்த சக்திவேல் மனைவி அனுசுயாவும் தோழிகள்.

    இந்த நிலையில் தனக்கு பணம் தேவைப்படுவதாக காந்திமீனாட்சி தெரிவித்தார். அப்போது பொன்னகரத்தைச் சேர்ந்த கணேசன் (25) என்பவர் சொசைட்டி மூலம் கடன் பெற்று தருவார். ரூ.20 ஆயிரம் கொடுத்தால் ரூ.5 லட்சம் வரை கிடைக்கும் என அனுசுயா தெரிவித்துள்ளார்.

    அதன்படி காந்திமீனாட்சி ரூ.15 ஆயிரம் கொடுத்தார். மேலும் அவருக்கு தெரிந்த பெண்கள் 15 பேரிடம் தலா ரூ.20 ஆயிரம் பெற்று கொடுத்துள்ளார். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட கணேசன் கடன் எதுவும் பெற்றுத்தரவில்லை.

    இதுகுறித்து போலீசில் காந்திமீனாட்சி புகார் செய்தார். அதில் கணேசன் ரூ.3½ லட்சம் மோசடி செய்ததாக குறிப்பிட்டிருந்தார். போலீசார் விசாரணை நடத்தி கணேசன், அவரது தாயார் கண்ணம்மாள் (49) ஆகியோரை கைது செய்தனர்.

    இந்த வழக்கில் தமைறைவான சக்திவேல், அவரது மனைவி அனுசுயா ஆகியோரை தேடி வருகின்றனர்.

    சர்வேயர் காலனி ஸ்ரீராம் கார்டன் பகுதியைச் சேர்ந்த அன்புச்செல்வன் (23) மாடு வாங்க திட்டமிட்டார். இதற்காக தனது 33 பவுன் நகையை உலகனேரியை சேர்ந்த சரவணன் (36) என்பவரிடம் கொடுத்து அதனை பணமாக்கி மாடு வாங்கி தரும்படி கூறினாராம்.

    நகையை பெற்றுக் கொண்ட சரவணன் திடீரென மாயமாகி விட்டார். அவரை தேடி கண்டுபிடித்து நகையை கேட்டபோது அவதூறாக பேசியதாக போலீசில் அன்புச்செல்வன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெய்ஹிந்துபுரம் நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (34). இவர் தனக்கு சொந்தமான 34 பவுன் நகைகள் மற்றும் ரூ.65 ஆயிரத்தை வீரகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (40) என்பவரிடம் கொடுத்து பாதுகாப்பாக வைத்திருக்கும்படி கூறி உள்ளார்.

    சிறிது காலம் கழித்து நகை-பணத்தை திருப்பிக் கேட்டபோது மணிகண்டன் இழுத்தடித்துள்ளார். இது குறித்து தெற்குவாசல் போலீசில் ராமமூர்த்தி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், அவரது மனைவி செல்வி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். #tamilnews
    சேலம் -02 ரூ.20 ஆயிரம் கட்டினால் மோட்டார் சைக்கிள் என்று கூறி பல கோடி ரூபாய் மோசடி: கலெக்டர் அலுவலகம் முற்றுகை; 2 பேர் தீக்குளிக்க முயற்சி பதட்டம்-போலீஸ் குவிப்பு
    சேலம்:

    சேலம் காந்தி ரோட்டில் ஜி.மார்ட் என்னும் நிறுவனத்தை நடத்தி வருபவர் கிருபாகரன் (வயது 35).

    இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.20 ஆயிரம் கட்டினால் மோட்டார் சைக்கிள் தருவதாகவும், மேலும் பணம் கட்ட வேண்டிய தேவையில்லை என்றும் விளம்பரம் செய்தார். மேலும் பல கவர்ச்சிக்கரமான சலுகைகளையும் அறிவித்தார்.

    இதை நம்பி சேலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஆண்களும், பெண்களும் கிருபாகரன் நிறுவனத்திற்கு வந்து பணத்தை கட்டினர். இதன் மூலம் அவருக்கு பல கோடி ரூபாய் கிடைத்ததாக தெரிகிறது.

    பணம் கட்டியவர்களிடம் தற்போது மோட்டார் சைக்கிள் அனைத்தும் தீர்ந்து விட்டது. அடுத்ததாக மோட்டார் சைக்கிள்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள்கள் வந்ததும் உங்களுக்கு தருகிறேன் எனக் கூறி அவர்களை கிருபாகரன் அனுப்பி வைத்தார்.

    பல நாட்கள் ஆகியும் மோட்டார் சைக்கிள் கொடுத்ததாக தெரிய வில்லை. தொடர்ந்து அவரிடம் சென்று கேட்கும் போதெல்லாம் இன்று தருகிறேன், நாளை தருகிறேன் என கூறி காலம் தாழ்த்தி வந்தார்.

    இதனால், பணம் கட்டியவர்கள் கன்னங்குறிச்சி பகுதிக்கு போகிற வழியில் உள்ள கிருபாகரன் வீட்டிற்கு சென்று அவரது மனைவியுடம், தாங்கள் கட்டிய பணத்தை திரும்ப தருமாறு கூறி முறையிட்டனர். அதற்கு அவர், வீட்டையும், நகைகளையும் விற்று உங்களுடைய பணத்தை தான் தருவதாக கூறினார்.

    இந்த நிலையில் கிருபாகரன், காந்தி ரோட்டில் உள்ள தனது நிறுவனத்தை திடீரென மூடிவிட்டு, வீட்டையும் பூட்டி விட்டு மனைவியுடன் தலைமறைவாகி விட்டார்.

    அவரிடம் பணம் கட்டியவர்கள் இதை கேள்விப்பட்டதும் அதிர்ச்சி அடைந்தனர். பல கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு, கிருபாகரன் ஓடி விட்டாரே? என்ன செய்வது? என அழுது புலம்பினர்.

    இது பற்றி கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக அவர்கள் திரண்டு வந்தனர். அவர்களை போலீசார், கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுமதிக்கவில்லை. 5 பேர் மட்டுமே செல்லுமாறு கூறினார்கள்.

    இதனால் கலெக்டர் அலுவலக மெயின் கேட்டை முற்றுகையிட்டு எங்களை அனுமதியுங்கள்.. அனுமதியுங்கள் என கோ‌ஷம் எழுப்பினார்கள்.

    அப்போது மேச்சேரி பகுதியை சேர்ந்த தனபால் (30), கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (30) ஆகியோர் தற்கொலை செய்வதற்காக கையில் கொண்டு வந்த மண்எண்ணையை தலையில் மளமளவென ஊற்றினார்கள்.

    இதை பார்த்த அங்கிருந்த போலீசார், உடனடியாக ஓடி வந்து 2 பேரையும் தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் அவர்கள் இருவரையும் வேனில் ஏற்றி விசாரணை நடத்துவதற்காக அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தை தொடங்கு அங்கு மேலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் கலெக்டர் அலுவலக பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    திருப்பூரில் காண்டிராக்டரிடம் ரூ.37 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக வங்கியின் முன்னாள் மேலாளர் மற்றும் புரோக்கர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. பில்டிங் காண்டிராக்டர். இவருக்கு முத்தனம்பாளையம் என்ற பகுதியில் ஒரு வீடு உள்ளது. இந்த வீட்டை திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் அடகுவைத்து ரூ. 14 லட்சம் கடன் பெற்றார்.

    பணத்தை கொடுத்த பைனான்ஸ் நிறுவனம் பணத்தை திருப்பி கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

    இதையடுத்து பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் இருந்த கிருஷ்ணமூர்த்திக்கு கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த புரோக்கர் செல்வகுமார் என்பவர் அறிமுகமானார்.

    செல்வகுமார் காண்டிராக்டர் கிருஷ்ணமூர்த்தியிடம் தனக்கு தெரிந்த ஆட்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் வங்கி கடன் பெற்று தருகிறேன் என்று கூறியுள்ளார். அதன்படி திருப்பூர் பழைய பஸ்நிலையம் பின்புறம் உள்ள ஒரு தனியார் வங்கிக்கு கிருஷ்ணமூர்த்தியை செல்வகுமார் அழைத்து சென்றார். அந்த வங்கியின் மேலாளராக இருந்த சிலம்புசெல்வி என்பவர் கடன் தருவதாக கூறி பல ஆவணங்களில் கையெழுத்து பெற்றார். மொத்தம் ரூ.54 லட்சத்து 50 ஆயிரம் கடன் ஒதுக்கிய அவர் கிருஷ்ணமூர்த்திக்கு ரூ.17 லட்சத்து 50 ஆயிரத்தை கொடுத்துவிட்டு மீதி பணம் ரூ.37 லட்சத்தை புரோக்கர் செல்வகுமாருடன் பங்குபோட்டு கொண்டார்.

    இந்த நிலையில் சிலம்புசெல்வி சென்னைக்கு மாறுதலாகி சென்று விட்டார். வங்கியில் இருந்து காண்டிராக்டர் கிருஷ்ணமூர்த்திக்கு ரூ.54லட்சத்து 50 ஆயிரம் கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வங்கிக்கு வந்து தான் ரூ.17 லட்சத்து 50 ஆயிரம் தான் கடன் வாங்கினேன் என்றார். ஆனால் வங்கி அதிகாரிகள் ரூ.54 லட்சத்து 50 ஆயிரம் கடன் வாங்கி இருப்பதை காட்டினர்.

    தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கிருஷ்ணமூர்த்தி இதுகுறித்து திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வங்கியின் முன்னாள் மேலாளர் சிலம்புசெல்வி, புரோக்கர் செல்வகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    கோவில்பட்டியில் அரசு சுகாதார துறையில் வேலை வாங்கி தருவதாக, பழ வியாபாரியிடம் ரூ.7¼ லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டி காமராஜ் நகரைச் சேர்ந்த அந்தோணிராஜ் மகன் அந்தோணி குரூஸ் (வயது 29). இவர் கோவில்பட்டி- மந்திதோப்பு ரோட்டில் பழக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு டிப்-டாப் உடை அணிந்த மர்மநபர் அடிக்கடி பழங்கள் வாங்க செல்வது வழக்கம். அப்போது அந்த நபர் தனது பெயர் ஜோதிராஜ் என்றும், கோவில்பட்டியில் வசிப்பவதாகவும், நெல்லையில் டாக்டராக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

    மேலும் அவர், சுகாதார துறையில் ஊழியர் பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுவதாகவும், இந்த வேலை பெறுவதற்கு ரூ.7¼ லட்சம் லஞ்சம் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் அவர், சுகாதார துறையில் பணியாற்றி வருவதாக பிரகாஷ் என்பவரையும், சான்றிதழ் சரிபார்ப்பு அலுவலராக பணியாற்றி வருவதாக கண்ணம்மா என்பவரையும் அந்தோணி குரூசிடம் அறிமுகப்படுத்தினார்.

    இதனை உண்மை என்று நம்பிய அந்தோணி குரூஸ், தனக்கு சுகாதார துறையில் வேலை வாங்கி தர வேண்டும் என்று கூறி, அந்த 3 பேரிடம் மொத்தம் ரூ.7¼ லட்சம் வழங்கினார். பின்னர் அந்த 3 பேரும், அவருக்கு வேலை வாங்கி தராமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதையடுத்து ஜோதிராஜ் வழங்கிய முகவரிக்கு சென்று பார்த்தபோது, அது போலியான முகவரி என்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து அவர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். இதுகுறித்து விசாரிக்குமாறு கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜிக்கு, கலெக்டர் சந்தீப் நந்தூரி பரிந்துரை செய்தார். இதுதொடர்பாக கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்தோணி குரூசிடம் அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். 
    ×