செய்திகள்
மதுரை தல்லாகுளம் அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு இன்று எல்.முருகன் மாலை அணிவித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்- எல்.முருகன்

Published On 2021-04-16 08:27 GMT   |   Update On 2021-04-16 08:27 GMT
தமிழகத்தில் பா.ஜ.க.வினர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வேண்டுமென்றே தாக்குதலை நடத்தி வருவதாக எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

அவனியாபுரம்:

தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் இன்று விமானம் மூலம் மதுரை வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் பா.ஜ.க.வினர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வேண்டுமென்றே தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

அம்பேத்கர் ஒரு தேசிய தலைவர். அதுவும் உலகம் போற்றும் தலைவர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய தலைவர். அவர் உருவாக்கிய அரசியல் சட்டத்தின் படிதான் அரசு இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் அனைவரும் போற்றும் தலைவரை ஒரு ஜாதிய தலைவராக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆக்க முயற்சிக்கின்றனர்.

பா.ஜ.க.வினரை வேண்டுமென்றே தேர்தல் பிரசார காலத்தில் தாக்கினார்கள். தற்போது 2 நாட்களுக்கு முன்பு மதுரையில் அம்பேத்கரின் பிறந்த நாள் விழாவின் போது சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற எங்களது கட்சியினர் மீது விடுதலை சிறுத்தைகளின் குண்டர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

எனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை மதுரை காவல்துறையினர் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.


வடமாவட்டங்களில் விடுதலை சிறுத்தை கட்சியினர் பலர் அந்த கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்துள்ளனர். இதை பொறுக்க முடியாத அந்த கட்சியினர் வேண்டுமென்றே எங்களது கட்சி தொண்டர்களை- நிர்வாகிகளை தாக்குகின்றனர்.

தமிழகத்தில் அமைதியாக இருக்கும் மக்களை ஜாதி மோதலை உருவாக்கும் வகையில் அரக்கோணத்தில் நடந்த தவிர்க்க வேண்டிய அந்த கொலை சம்பவம் 2 நண்பர்களுக்குள் நடந்தது என்று தெரிந்த பின்பும் விடுதலை சிறுத்தைகள், தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் வேண்டுமென்றே ஜாதி மோதலை உருவாக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றன.

எனவே ஜாதி மோதலை உருவாக்கும் நபர்கள் மீது தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News