தேர்தல் தகராறில் மோதல்- அ.தி.மு.கவினரை வீடு புகுந்து தாக்கியதால் சாலை மறியல்
வத்தலக்குண்டு:
தமிழகத்தில் நேற்று வாக்குப்பதிவு 234 தொகுதிகளிலும் நடைபெற்றது. நிலக்கோட்டை தொகுதிக்குட்பட்ட வத்தலக்குண்டு பேரூராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெற்றபோது அ.தி.மு.க வார்டு செயலாளர் குமரேசன் மற்றும் தி.மு.க முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் ரவி ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதனைதொடர்ந்து தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் இருதரப்பினரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
இரவு 7 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தபின்னர் குமரேசன் தனது வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கு சென்ற தி.மு.கவினர் வீடுபுகுந்து குமரேசன், அவரது மனைவி மற்றும் உறவினர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 4 பேர் காயமடைந்து வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் அ.தி.மு.கவினர் இடையே கோபத்தை ஏற்படுத்தியது.
சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரி அவர்கள் வத்தலக்குண்டு பஸ்நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் இருபுறம் அணிவகுத்து நின்றன. தகவலறிந்த வத்தலக்குண்டு போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்படும் என உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.