இளம்பெண் பலாத்காரம்: வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில்
கோவை:
கோவை அன்னூர் அருகே உள்ளது அம்போதி. இங்குள்ள லக்கேபாளையத்தை சேர்ந்த 60 வயது மூதாட்டி தனது 39 வயது மனவளர்ச்சி குன்றிய மகளுடன் வசித்து வருகிறார். மேலும் வாய் பேசமுடியாத மகளை எங்கு சென்றாலும் உடன் அழைத்துச்சென்று பராமரித்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று ஆடு மேய்க்க புறப்பட்ட மூதாட்டி தன்னுடன் மகளையும் அழைத்துச்சென்றார். மகளை ஒரு இடத்தில் உட்கார வைத்து விட்டு ஆடுகளை மேய்ச்சலுக்கு அவிழ்ந்துவிட சென்றார். அப்போது அங்கு வந்த மேட்டுப்பாளையம் இரும்பறையை சேர்ந்த சரவணன் (34) என்பவர் தனியே இருந்த மாற்றுதிறனாளி பெண்ணை புதருக்குள் தூக்கிச்சென்றார்.
ஆடுகளை அவிழ்த்துவிட்டு திரும்பிய மூதாட்டி மகளை திடீரென மாயமானதை அறிந்து தேடினார். அப்போது சரவணன் மகளை பலாத்காரம் செய்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டார்.
இதனையடுத்து அவர் தப்பி ஓடினார். இது குறித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் கற்பகம் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தார். இது குறித்தான வழக்கு கோவை மகிளா கோர்ட்டில் நடந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பு வழங்கினார். அதில் சரவணன் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருக்கு 10 ஆண்டு ஜெயில் மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.