செய்திகள்
ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்:
திருமங்கலம் ரெயில் நிலையம் அருகே தண்டவாள பகுதியில் அமைக்கப்படும் சிலிப்பர் கட்டைகள் தயாரிக்கும் தனியார் நிறுவனம் உள்ளது. இங்கு வடமாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர். ஒடிசா மாநிலம் அட்கா மாவட்டத்தைச் சேர்ந்த சுபம்குமார்பட்ரோ(வயது 26) என்பவரும் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் அங்குள்ள ரெயில்வே தண்டவாளம் நடுப்பகுதியில் நின்றுகொண்டு நடனம் ஆடி உள்ளார். அப்போது அந்த வழியே சென்ற ரெயில் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து விருதுநகர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.