செய்திகள்
கொடைக்கானல் பாம்பார் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதை காணலாம்.

கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த மழை- அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

Published On 2021-03-22 03:25 GMT   |   Update On 2021-03-22 03:25 GMT
கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த மழையினால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் வாரத்தில் கோடை மழையுடன் குளு குளு சீசன் தொடங்கும். இந்த ஆண்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது.

அதன்பின்பு பகல் நேரத்தில் வெயிலின் தாக்கமும், மாலை நேரத்தில் குளிர்ச்சியான சூழ்நிலையும் நிலவி வந்தது. இந்த நிலையில் நேற்று காலை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பின்னர் மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பகல் 1 மணிக்கு பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.

பலத்த மழை காரணமாக பாம்பார் அருவி, வெள்ளிநீர்வீழ்ச்சி, பியர்சோலா அருவி ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதைத்தொடர்ந்து இதயத்தை வருடும் இதமான சூழ்நிலை நிலவியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று பெய்த பலத்த மழை இந்த ஆண்டு முன்கூட்டியே குளு குளு சீசன் தொடங்கியதற்கான அறிகுறியாக அமைந்தது. இதனால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
Tags:    

Similar News