செய்திகள்
தற்கொலை

பெற்றோர் கல்லறையில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை

Published On 2021-02-17 02:37 GMT   |   Update On 2021-02-17 02:37 GMT
குளச்சல் அருகே விவசாயத்தில் தொடர் நஷ்டம் ஏற்பட்டதால் விவசாயி பெற்றோரின் கல்லறையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
குளச்சல்:

குளச்சல் அருகே பெத்தேல்புரம் கூட்டுவிளையை சேர்ந்தவர் சின்னத்தம்பி (வயது 55). இவர் நெய்யூர், புத்தேரி ஆகிய பகுதிகளில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து வாழை விவசாயம் செய்து வந்தார். கடந்த சில மாதங்களாக வாழை விவசாயத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அவர் கடன் வாங்கி மீண்டும் வாழை பயிரிட்டார். ஆனாலும், தொடர்ந்து அவருக்கு விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டு வந்ததால் கடனை அடைக்க முடியாமல் அவதியடைந்தார்.

இதுகுறித்து குடும்பத்தினரிடம் அடிக்கடி கூறி வருத்தப்பட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் அருகில் உள்ள கால்வாயில் குளித்து விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் அவரை அக்கம் பக்கத்தில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

நேற்று காலையில் சின்னத்தம்பி அந்தபகுதியில் உள்ள தனது பெற்றோரின் கல்லறையில் அருகில் இறந்து கிடப்பதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி குளச்சல் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் சின்னத்தம்பி விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. பின்னர், பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இறந்த சின்னத்தம்பிக்கு புஷ்பலதா என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
Tags:    

Similar News