செய்திகள்
தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய கட்சிகள் சேருவது குறித்து அதிமுக முடிவு எடுக்கும்- வானதி சீனிவாசன்
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமை வகிக்கிறது. புதிய கட்சிகள் சேருவது குறித்து அவர்கள் முடிவு எடுப்பார்கள் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
திருப்பூர்:
பா.ஜனதா மகளிர் அணி தேசிய தலைவி வானதி சீனிவாசன் திருப்பூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக கவர்னர், ஜனாதிபதிக்கு முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது என்று தெரிவித்துள்ளார். எனவே அவர்தான் முடிவு எடுப்பார். தமிழகத்தின் மிக முக்கிய பிரச்சினைகளான மீனவர் பிரச்சினை, காவிரி பிரச்சினைக்கு மத்திய அரசு தீர்வு கண்டுள்ளது.
இலங்கை தமிழர்களின் ஒரே நம்பிக்கையாக பிரதமர் மோடி இருக்கிறார். தமிழகத்தின் உணர்வு ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு தமிழகத்தை அமைதி பூமியாக பிரதமர் மோடி மாற்றியிருக்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமை வகிக்கிறது. கூட்டணியை பொருத்தவரை புதிதாக ஒரு கட்சி சேர்வது குறித்து முடிவு எடுப்பதில் மிக முக்கிய பங்கு அ.தி.மு.க.வுக்கு உள்ளது. அவர்கள்தான் முடிவு எடுப்பது சிறந்ததாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.