செய்திகள்
சின்னசேலம் அருகே கார் மோதி தொழிலாளி பலி- 3 பேர் படுகாயம்
சின்னசேலம் அருகே கார் மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
சின்னசேலம்:
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கோவிந்தம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வரதன்(வயது 55). விவசாய தொழிலாளியான இவர் சம்பவத்தன்று அவரது மனைவி கெப்பியம்மாளுடன் மொபட்டில் சின்னசேலம் அருகே அம்மையகரம் கிராமத்தில் உள்ள தனது குலதெய்வமான சென்னப்பன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு மீ்ண்டும் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.
சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அ.வாசுதேவனூரில் சாலையை கடப்பதற்காக தடுப்பு சுவர் அருகில் நின்று கொண்டிருந்தபோது சென்னையில் இருந்து சேலம் நோக்கி வந்த கார் வரதனின் மொபட் மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த வரதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த கெப்பியம்மாள் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த ஞானசேகர், காசி மனைவி யசோதா ஆகியோரை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விபத்துக்கு காரணமான கார் டிரைவர் சேலத்தைச் சேர்ந்த அல்லாபகஸ்(43) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.