செய்திகள்
அதிமுக கூட்டணியில்தான் பாஜக தொடர்கிறது- மதுரை பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா அறிவிப்பு
மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஜே.பி.நட்டா, வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியை உறுதி செய்தார்.
மதுரை:
மதுரையில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது:-
வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தான் பாஜக தொடர்கிறது. பாஜக, அதிமுக இணைந்து சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும். தமிழகம் தேசிய நீரோட்டத்தில் இணையவேண்டும். அதற்கு, மக்கள் பாஜகவை ஆதரிக்க வேண்டும். தேசிய நீரோட்டத்தில் இணைந்தால்தான் தமிழகத்திற்கு இன்னும் பல திட்டங்கள் கிடைக்கும். தேர்தல் வந்தவுடன் திமுக தலைவர் ஸ்டாலின் வேல் எடுக்கிறார்.
பாஜக ஆட்சியில் சென்னை , திருச்சி, சேலம் உள்ளிட்ட நகரங்களில் வேலைவாய்ப்பு தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரைக்கு அதிக அளவில் வளர்ச்சி கட்டமைப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநில தலைவர் எல்.முருகன், தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, சுதாகர் ரெட்டி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், சமூக ஊடக தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.