செய்திகள்
வீட்டில் மாவு அரைக்கும் போது கிரைண்டர் மீது கை வைத்து விளையாடியதில், மின்சாரம் தாக்கி சிறுவன் பலியானான்.
திருவள்ளூரை அடுத்த பட்டரைப்பெருமந்தூர் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வி. இவர், நாராயணபுரம் பகுதியில் டிபன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மகன் ராகவன் (வயது 13). நேற்று முன்தினம் செல்வி தன் வீட்டில் இருந்த கிரைண்டரில் மாவு அரைத்து கொண்டிருந்தார். அங்கு வந்த ராகவன், கிரைண்டர் மீது கை வைத்து விளையாடி கொண்டி இருந்தார்.அப்போது சிறுவன் மீது திடீரென மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டார். இதைக்கண்ட செல்வி அலறி கூச்சலிட்டார்.
அவரது வீட்டில் உள்ளவர்கள் ஓடி வந்து சிறுவனை மீட்டு, சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் ராகவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது சம்பந்தமாக திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.