செய்திகள்
போலீசார் விசாரணை

போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் வழக்கு- கைதான டாக்டரிடம் போலீஸ் காவலில் விசாரணை

Published On 2021-01-09 03:28 GMT   |   Update On 2021-01-09 03:28 GMT
நீட் போலி மதிப்பெண் சான்றிதழ் வழக்கில் கைதான டாக்டரிடம் போலீஸ் காவலில் விசாரணை நடக்கிறது.
சென்னை:

சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வில் போலி நீட் மதிப்பெண் சான்றிதழுடன் மாணவி தீக்‌ஷா (வயது 18) என்பவர் கலந்து கொண்டார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த அந்த மாணவியின் தந்தையின் பெயர் பாலச்சந்திரன். பல் டாக்டரான இவர் தனது மகள் மாணவி தீக்‌ஷாவுடன், மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்றார். அப்போது அவர் தாக்கல் செய்த நீட் தேர்வு மதிப்பெண் சான்றிதழ் போலியானது என்று கண்டறியப்பட்டது.

அந்த மாணவி நீட் தேர்வில் பெற்ற உண்மையான மதிப்பெண் 27. ஆனால் மருத்துவ கலந்தாய்வில் சமர்ப்பித்த சான்றிதழில் 610 மதிப்பெண்கள் பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

ஒரு கம்ப்யூட்டர் மையம் மூலமாக 610 மதிப்பெண் பெற்ற இன்னொரு மாணவியின் சான்றிதழில் பெயர் மற்றும் புகைப்படத்தை மாற்றி போலி சான்றிதழ் தயாரித்துள்ளனர். மாணவி தீக்‌ஷா மற்றும் அவரது தந்தை மீது, சென்னை பெரியமேடு போலீசில், மருத்துவ கலந்தாய்வு குழு தலைவர் செல்வராஜ் புகார் கொடுத்தார்.

அதன் அடிப்படையில் பெரியமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். மாணவி, அவரது தந்தை இருவரையும் விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி பெரியமேடு போலீசார் 3 முறை சம்மன் அனுப்பினர். அதற்கு அவர்கள் இருவரும் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை. தங்கள் வீட்டை பூட்டி விட்டு அவர்கள் குடும்பத்தோடு தலைமறைவு ஆகிவிட்டனர்.

அவர்களை கைது செய்ய 4 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதற்கிடையில் மாணவியின் தந்தை டாக்டர் பாலச்சந்திரன் கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

நீட் போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்க இடைத்தரகர் ஒருவருக்கு ரூ.25 ஆயிரம் கொடுத்துள்ளதாகவும், பரமக்குடியைச் சேர்ந்த அவரை போலீசார் தேடி வருவதாகவும், தகவல் வெளியானது. அதை போலீசார் மறுத்தனர். கைதான மாணவியின் தந்தை டாக்டர் பாலச்சந்திரன், போலி மதிப்பெண் சான்றிதழை தனது கம்ப்யூட்டரில் தானே தயாரித்ததாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் அது பற்றி விசாரிக்க டாக்டர் பாலச்சந்திரனை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்திருக்க கோர்ட்டு நேற்று அனுமதி வழங்கியது. அதன்படி டாக்டர் பாலச்சந்திரனை போலீஸ் காவலில் வைத்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. மேலும் தலைமறைவான மாணவி தீக்‌ஷாவை கைது செய்யவும் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடக்கிறது.
Tags:    

Similar News