செய்திகள்
வேடசந்தூர் அருகே விவசாயிகளுக்கு அரிவாள் வெட்டு- 2 பேர் கைது
வேடசந்தூர் அருகே பெண் கொலை சம்பவத்தில் பலி வாங்கும் நோக்கில் விவசாயிகளை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே உள்ள தொட்டணம்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 55). விவசாயி. நேற்று முன்தினம் இவரும், அவருடைய உறவினர் விவசாயி மாரநாட்டானும் (45) தொட்டணம்பட்டி பஸ் நிறுத்தத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் கிருஷ்ணன், மாரநாட்டான் ஆகியோரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். படுகாயமடைந்த அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்திரபாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் தொடர்பாக சொட்டமாயனூரை சேர்ந்த நல்லமுனியப்பன் (22), கோவை மாவட்டம் சோமனூரை சேர்ந்த சரவணக்குமார் (22) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் கடந்த 2018-ம் ஆண்டு சொட்டமாயனூரை சேர்ந்த கணேசன் மனைவி மஞ்சுளா (45) கொலை சம்பவத்தில் பலி வாங்கும் நோக்கில் அவர்களை அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.