செய்திகள்
மது விற்பனை என்பதே கொள்ளையடிப்பதற்கு சமம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி
பெரும்பாலானோர் கொள்ளையடித்த பணத்தை கொண்டே மது வாங்க வருவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
மதுரை:
மது விற்பனை தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை, நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்னிலையில் இன்று நடைபெற்றது.
அப்போது பேசிய நீதிபதிகள், மது விற்பனை என்பதே கொள்ளையடிப்பதற்கு சமம். மதுவை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது, அவர்களிடமே கொள்ளையடிப்பது போல உள்ளது. மதுபான கடைகளில் நீதிபதிகளே நேரடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படலாம். பெரும்பாலானோர் கொள்ளையடித்த பணத்தை வைத்து மதுவாங்க வருகின்றனர்.
கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யும் நபர்களிடம் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?. கடந்த 10 வருடங்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்ட மதுபானங்கள் மற்றும் இந்த குற்றச்சாட்டின் கீழ் யார் யாரை அரசு காவல்துறை மூலமாக கைது செய்துள்ளது?. எந்த நிறுவனத்திடம் இருந்து மது வாங்கப்படுகிறது?. தமிழகத்தில் மதுபானத்திற்கு விலை எதன் அடிப்படியில் நிர்ணயம் செய்யப்படுகிறது? என்று தமிழக அரசு விரிவான பதிலை அளிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் இவ்வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.