செய்திகள்
கைது

சேலத்தில் பச்சிளம் பெண் குழந்தையை கடத்தி ரூ.1 லட்சத்துக்கு விற்பனை- 2 பெண்கள் கைது

Published On 2020-12-11 21:46 GMT   |   Update On 2020-12-11 21:46 GMT
சேலத்தில் பச்சிளம் பெண் குழந்தையை கடத்தி ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்துக்கு விற்பனை செய்தது தொடர்பாக 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
சேலம்:

சேலம் நெத்திமேடு கே.பி.கரடு பகுதியை சேர்ந்தவர் விஜய் (வயது 32), டிரைவர். இவருடைய மனைவி சத்யா (28). இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதனிடையே மீண்டும் கர்ப்பமான சத்யாவுக்கு கடந்த மாதம் மேச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது. மீண்டும் பெண் குழந்தை பிறந்ததால் விஜய் அதிர்ச்சி அடைந்தார்.

இந்த நிலையில் பிறந்து 15 நாட்களுக்கு பின் அந்த குழந்தையை மனைவிக்கு தெரியாமல் விஜய் கடத்தி சென்று ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்துக்கு விற்று விட்டார். இதுபற்றி தெரியவந்ததும் சத்யா அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் குழந்தையை கண்டுபிடித்து மீட்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே போலீசார் தேடுவதை அறிந்ததும் விஜய் தலைமறைவாகி விட்டார்.

இந்த நிலையில் குழந்தையை கடத்தி விற்க புரோக்கர்களாக செயல்பட்ட கே.பி.கரடு பகுதியை சேர்ந்த கோமதி (34) மற்றும் ஈரோட்டை சேர்ந்த சந்திரசேகரன் என்பவருடைய மனைவி நிஷா (40) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும் குழந்தை கடத்தப்பட்டதில் மேலும் 2 புரோக்கர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களையும், விஜயையும் பிடித்தால் தான் குழந்தை எங்கிருக்கிறது? என்பது தெரியவரும் என்று போலீசார் கூறுகின்றனர்.

இதனிடையே இந்த பச்சிளம் குழந்தை பெங்களூருவுக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து ஐதராபாத்துக்கு அனுப்பப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பச்சிளம் பெண் குழந்தையை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பச்சிளம் பெண் குழந்தையை கடத்தி விற்பனை செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News