செய்திகள்
தக்கலை தாலுகா அலுவலகம் முன் தி.மு.க.வினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
தக்கலை தாலுகா அலுவலகம் முன் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
பத்மநாபபுரம்:
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியும் மாவட்டம் தோறும் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
அதன்படி குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தக்கலையில் உள்ள கல்குளம் தாலுகா அலுவலகம் முன் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதற்கு மேற்கு மாவட்ட செயலாளர் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
தக்கலை நகர செயலாளர் மணி, முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பலீலா ஆல்பன், ஒன்றிய செயலாளர்கள் அருளானந்த ஜார்ஜ், ஜான் பிரைட் மற்றும் பைங்குளம் பேரூர் தி.மு.க. செயலாளர் அம்சி நடராஜன், ஜாண் கிறிஸ்டோபர், டி.பி. ராஜன், ஜான்சன், மாஸ்டர் மோகனன், ராஜேஷ் குமார், கோபாலகிருஷ்ணன், ரவிச்சந்திரன், மனோன்மணி, ஆசைத்தம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட தி.மு.க.வினர் கருப்புக்கொடியை கையில் ஏந்தி இருந்தனர். அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.