செய்திகள்
ஆறுமுகநேரியில் பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது
ஆறுமுகநேரியில் தனியார் தோட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1.80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி அடுத்துள்ள எல்.ஆர். நகர் பகுதியில் உள்ள ஒதுக்குப்புறமான தனியார் தோட்டத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக ஆறுமுகநேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் நாராயணன் மற்றும் போலீசார் எல்.ஆர். நகர் பகுதிக்கு சென்று, அந்த தோட்டத்தை சுற்றி வளைத்து சோதனை நடத்தினர். அப்போது அங்கு 7 பேர் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர். அவர்களை கையும் களவுமாக பிடித்தனர்.
அவர்களிடம், போலீசார் நடத்திய விசாரணையில்,‘ ஆறுமுகநேரி எஸ்.ஆர்.எஸ். கார்டன் பகுதியைச் சேர்ந்த காமராஜ்(வயது 50), ஆத்தூரை அடுத்த தெற்கு மறந்தலையையைச் சேர்ந்த அன்புராஜ்(34), முக்காணியை சேர்ந்த ராஜ்குமார், புன்னைசாத்தான் குறிச்சியை சேர்ந்த நவநீதன்(38), சாத்தான்குளம் வெங்கட் ராஜபுரத்தைச் சேர்ந்த சுடலை(35), முக்கானியை சேர்ந்த கண்ணன்(38), அதே ஊரை சேர்ந்த ஆனந்த் (27) ஆகியோர் என தெரிய வந்தது. இது தொடர்பாக ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 7 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1.80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.