செய்திகள்
நல்லூர் துணை மின்நிலையத்தில் மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு
நல்லூர் துணை மின்நிலையத்தில் மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கந்தம்பாளையம்:
கந்தம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 27-ந் தேதி இரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் நல்லூர் துணை மின்நிலையத்தில் உள்ள ஒரு மின்கம்பத்திலும் பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நல்லூர் துணை மின்நிலையத்தில் குறைந்த பணியாளர்களே இருப்பதால் பழுது ஏற்பட்டால் கூடுதல் ஆட்களை சித்தாளந்தூர் பிரிவு மின்நிலையத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு பணிகள் நடைபெறுவது வழக்கம்.
இதற்கிடையே காளியப்பனூரை சேர்ந்த காளியண்ணன் (வயது 45) என்பவர் சித்தாளந்தூர் பிரிவு மின்நிலைய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். நல்லூர் துணை மின்நிலைய அதிகாரி அழைப்பின்பேரில் காளியண்ணன் கடந்த 27-ந் தேதி இரவு துணை மின்நிலையத்தில் பழுது ஏற்பட்ட மின்கம்பத்தை சரி செய்வதற்காக வந்தார்.
அப்போது மின்கம்பத்தில் ஏறி பழுதை சரி செய்யும்போது திடீரென அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி காளியண்ணன் நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.