செய்திகள்
கைது

கேரளாவிற்கு 270 கிலோ கஞ்சா கடத்திய வாலிபர் கைது

Published On 2020-10-24 13:31 GMT   |   Update On 2020-10-24 13:31 GMT
கேரளாவிற்கு 270 கிலோ கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:

மதுரை பாண்டி கோவில் ரிங் ரோடு வழியாக வாகனத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக மதுரை அண்ணா நகர் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரீகன், மணிமாறன் மற்றும் போலீசார் ராம்குமார், கார்த்திக், ரெங்கநாதன், தமிழரசன், கார்த்திக்ராஜா, முனீஸ்வரன் ஆகியோர் அந்த பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் காரின் பின் பகுதியில் பாலிதீன் சுற்றப்பட்ட பைகளில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் காரை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வெள்ளராடா பகுதியை சேர்ந்த தேவநேசன் மகன் ராபர்ட் விக்டர்(வயது 24) என்பதும், இவர் விசாகப்பட்டினத்தில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்தி சென்றதும் தெரியவந்தது.

பின்னர் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து மொத்தம் 270 கிலோ கஞ்சா மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் விரைந்து செயல்பட்டு கஞ்சா கடத்தலை தடுத்த அண்ணாநகர் போலீசாரை போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.
Tags:    

Similar News