செய்திகள்
கைது

சிவகாசி அருகே நூதன முறையில் மூதாட்டியிடம் நகை பறிப்பு- வாலிபர் கைது

Published On 2020-10-22 13:44 GMT   |   Update On 2020-10-22 13:44 GMT
சிவகாசி அருகே நூதன முறையில் மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி:

சிவகாசி அருகே உள்ள கீழத்திருத்தங்கல் முருகன் காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி பரமேஸ்வரி (வயது 61). இவர் தனது மகள் ராமலட்சுமியுடன் வசித்து வருகிறார். பள்ளப்பட்டி ரோட்டில் ராமலட்சுமிக்கு சொந்தமான கடை உள்ளது.

அதில் பரமேஸ்வரி வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் கடையில் இருந்த பிஸ்கெட்டை விலை கேட்பது போல் கேட்டு மூதாட்டி பரமேஸ்வரியின் கவனத்தை திசை திருப்பி அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பி ஓட முயன்றுள்ளார்.

அப்போது பரமேஸ்வரி சத்தம் போட்டதால் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த சிலர், நகையை பறித்துக்கொண்டு தப்பி ஓடிய வாலிபரை துரத்தி பிடித்தனர். பின்னர் அவனை சிவகாசி கிழக்கு போலீசில் ஒப்படைத்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் மூதாட்டி கழுத்தில் கிடந்த நகையை பறித்துக்கொண்டு தப்பி செல்ல முயன்ற வாலிபர் மதுரை மாவட்டம் பேரையூர் பெருமாள் கோவில்தெருவை சேர்ந்த மன்சூர் மகன் ஜாபர் (19) என்றும் அவர் தற்போது சிவகாசி ஆயில்மில் காலனியில் தங்கி உள்ளார் என்றும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News