செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம்

ஓபிஎஸ், ஈபிஎஸ் கோரிக்கை நிறைவேறியது- தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்

Published On 2020-10-07 05:16 GMT   |   Update On 2020-10-07 05:16 GMT
அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சி அறிவிப்பைத் தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்.
சென்னை:

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவில் சார்பில் முதல்வர் வேட்பாளராக யார் முன்னிறுத்தப்படுவார்? என்பது தொடர்பாக கடந்த சில தினங்களாக அக்கட்சி தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டது. செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் இந்த விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது. கடந்த சில தினங்களாகவே முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தங்களின் ஆதரவு நிர்வாகிகள், மூத்த அமைச்சர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினர்.  இன்று காலையிலும் ஆலோசனை நீடித்தது.

இந்நிலையில் காலை 10 மணியளவில் அதிமுக தலைமையகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தார். அதிமுக முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடுவார் என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முறைப்படி அறிவித்தார். இதேபோல் கட்சியை வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சரும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதன்மூலம் வழிகாட்டுதல் குழு அமைக்க வேண்டும் என்ற ஓபிஎஸ் கோரிக்கையும், தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற ஈபிஎஸ் கோரிக்கையும் நிறைவேறி உள்ளது. கட்சி அறிவிப்பைத் தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும், நடனமாடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.




Tags:    

Similar News