செய்திகள்
அரூர் அருகே பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரூர்:
அரூர் அருகே உள்ள நடுத்திட்டு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்பிரியா. இவருடைய மகள் சுகந்தி (வயது 13). சந்தோஷ்பிரியா முதல் கணவரை பிரிந்து இடைப்பாடியை சேர்ந்த முருகன் என்பவருடன் வசித்து வருகிறார். சுகந்தி தர்மபுரியில் உள்ள ஒரு சிறுவர்கள் இல்லத்தில் தங்கி அங்குள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். மாணவி கொரோனா விடுமுறையால் நடுத்திட்டு கிராமத்தில் உள்ள தாத்தா வீட்டில் வசித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாணவியின் தாத்தா மற்றும் பாட்டி ஆகிய 2 பேரும் கடத்தூர் அடுத்த அஸ்தகிரியூரில் உறவினர் இறந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்று இருந்தனர். இதனிடையே வீட்டில் தனியாக இருந்த மாணவி சுகந்தி அங்குள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோட்டப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.