செய்திகள்
கொடைக்கானல் நட்சத்திர ஏரி

கொடைக்கானலில் 10 புதிய சுற்றுலா இடங்கள் தேர்வு

Published On 2020-09-26 10:25 GMT   |   Update On 2020-09-26 10:25 GMT
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அதிக நாட்கள் தங்கும் வகையில் 10 புதிய சுற்றுலா இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
கொடைக்கானல்:

‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானல் பகுதியில் ஏராளமான சுற்றுலா இடங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் நகர் மற்றும் வனப்பகுதியில் உள்ளன. எனவே கொடைக்கானலில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் கிராம பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களை கண்டறிந்து, அங்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கான இடவசதி, தங்கும் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும், பல்வேறு சாத்தியக்கூறுகள் குறித்தும் சுற்றுலாத்துறையின் சார்பில் தனியார் நிறுவனம் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 2 நாட்களாக நடந்த இந்த ஆய்வில், 10 புதிய சுற்றுலா இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, பள்ளங்கி பகுதியில் உள்ள கொட்டிவரை அருவி, ரிவர்ஸ் வாக், பேத்துப்பாறை பகுதியில் உள்ள ஐந்துவீடு அருவி, ஆதிமனிதன் வாழ்ந்த கல்திட்டைகள், ஓராவி அருவி, போளூர் கிராமத்தில் உள்ள புலவச்சி ஆறு நீர்வீழ்ச்சி, பூம்பாறை, மன்னவனூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சிறு நீர்வீழ்ச்சிகளையும், இயற்கை எழில் காட்சிகளையும் தனியார் நிறுவனத்தின் குழுவினர் ஆய்வு செய்தனர். மேலும் தங்களது ஆய்வு குறித்த அறிக்கையினை, சுற்றுலாத்துறை உயர் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.

இதுகுறித்து சுற்றுலாத்துறை உதவி அலுவலர் ஆனந்தன் கூறுகையில், “கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் அதிக நாட்கள் தங்குவதற்காகவும், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரும் பொருட்டும், புதிய சுற்றுலா இடங்களை கண்டறிந்து பட்டியலிடுவது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி கிராம பகுதிகளில் உள்ள 10 சுற்றுலா இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இதன் அறிக்கை தனியார் நிறுவனம் மூலம் சுற்றுலாத்துறை உயர் அதிகாரிகளிடம் விரைவில் வழங்கப்படும்” என்றார்.

கொடைக்கானல் சப்-கலெக்டர் சிவகுரு பிரபாகரன் கூறும்போது, “கொடைக்கானல் பகுதியில் புதிய சுற்றுலா இடங்களை கண்டறியவும், அவற்றை மேம்படுத்தவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் பல்வேறு புதிய சுற்றுலா இடங்கள் கண்டறியப்பட்டு, அவை பட்டியலிடப்படும். மேலும் பொதுமக்கள் தங்களுக்கு தெரிந்த புதிய சுற்றுலா இடங்கள் குறித்த தகவல்களையும் எங்களுக்கு தெரிவிக்கலாம். அந்த இடங்களும் ஆய்வு செய்யப்படும்” என்றார்.
Tags:    

Similar News