செய்திகள்
சேலத்தில் கொரோனாவுக்கு மேலும் 288 பேர் பாதிப்பு
சேலத்தில் கொரோனாவுக்கு மேலும் 288 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பெண்கள் உள்பட 6 பேர் பலியானார்கள்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 291 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மேலும் 288 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 187 பேர் பாதிக்கப்பட்டனர்.
எடப்பாடி ஒன்றியத்தில் 4 பேர், எடப்பாடி நகராட்சி பகுதியில் 6 பேர், காடையாம்பட்டியில் 2 பேர், மகுடஞ்சாவடியில் 5 பேர், மேச்சேரியில் 4 பேர், மேட்டூர் நகராட்சியில் 2 பேர், நங்கவள்ளியில் 3 பேர், ஓமலூரில் 12 பேர், சேலம் ஒன்றியத்தில் 2 பேர், சங்ககிரியில் 6 பேர், தாரமங்கலத்தில் 4 பேர், வீரபாண்டியில் 3 பேர், ஆத்தூர் ஒன்றியத்தில் 3 பேர், ஆத்தூர் நகராட்சியில் 8 பேர், அயோத்தியாப்பட்டணத்தில் 3 பேர், கெங்கவல்லியில் 5 பேர், நரசிங்கபுரம் பகுதியில் 2 பேர், பனமரத்துப்பட்டியில் 6 பேர், பெத்தநாயக்கன்பாளையத்தில் 6 பேர், தலைவாசலில் 4 பேர், வாழப்பாடியில் 7 பேர் மற்றும் கெங்கவல்லியில் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தர்மபுரியில் இருந்து சேலத்திற்கு வந்த ஒருவரும், நாமக்கல்லில் இருந்து வந்த 2 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்து 923 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 269 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்ததால், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கிச்சிப்பாளையத்தை சேர்ந்த 54 வயது நபரும், பச்சப்பட்டியை சேர்ந்த 79 வயது முதியவரும், கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த 50 வயது பெண்ணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அதேபோல் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 62 வயது முதியவர், 64 வயது முதியவர், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 67 வயது மூதாட்டி ஆகியோர் இறந்துள்ளனர்.