ஆரம்ப சுகாதார நிலையத்தில் முககவசம் அணியாததை தட்டிக்கேட்ட நர்சு மீது தாக்குதல்
கீழ்பென்னாத்தூர்:
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த கொளத்தூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறுவதற்காக 3 வாலிபர்கள் வந்தனர். அப்போது அவர்கள் குடிபோதையில் இருந்ததுடன், முககவசம் அணியவில்லை.
இதை கவனித்த நர்சு சகாயமேரி முககவசம் அணிந்துகொண்டு உள்ளே வருமாறு அந்த வாலிபர்களிடம் கூறினார்.
அதற்கு அவர்கள் இதையெல்லாம் கேட்பதற்கு நீ யார்? என கேட்டு நர்சுடன் தகராறு செய்தனர். மேலும் ஆத்திரமடைந்த அவர்கள், நர்சு சகாயமேரியை சரமாரியாக தாக்கியதுடன், ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த மேசை, நாற்காலி மற்றும் கண்ணாடி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கிவிட்டு தப்பிசென்றனர். இந்த தாக்குதலில் சகாயமேரி காயமடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் நாட்றம்பள்ளி தாலுகா அக்ரகாரம் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருபவர் பூபதி. பூங்கான்வட்டம் பகுதியை சேர்ந்தவர் முருகன், ராணுவ வீரர். இவர் கடந்த 22-ந் தேதி விடுமுறையில் தனது ஊருக்கு வந்தார்.
இதையறிந்த பூபதி முருகனிடம் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள கூறினார். அதற்கு அவர் நான் ஏற்கனவே பரிசோதனை செய்துவிட்டேன் என்றார். ஆனால் பூபதி பேச்சுவார்த்தை நடத்தி முருகனுக்கு கொரோனா பரிசோதனை செய்து அக்ரகாரம் பகுதியில் இயங்கிவரும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி முகாமில் முருகனை 4 நாட்கள் தனிமைப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் பூபதி பாலிடெக்னிக் கல்லூரியில் கொரோனா தடுப்பு பணிக்காக சென்றார். அப்போது அங்கிருந்த முருகன், தன்னை தனிமைப்படுத்தியதால் ஆத்திரமடைந்து பூபதியை கட்டையால் சரமாரியாக தாக்கினார். இதில் பூபதி படுகாயமடைந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.