செய்திகள்
விநாயகர் சதுர்த்தி விழா -தமிழக அரசு விதித்த தடையை நீக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு
விநாயகர் சிலைகளை நிறுவி வழிபட தமிழக அரசு விதித்த தடையை நீக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை:
விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக பொது இடங்களில் சிலை வைத்து வழிபட தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையை நீக்கி, சிலை வைத்து வழிபட அனுமதிக்க வேண்டும் என பாஜக மற்றும் இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருப்பதாலும், திருவிழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு தடை தொடர்வதாலும், சிலை வைத்து கொண்டாட தமிழக அரசு திட்டவட்டமாக அனுமதி மறுத்துவிட்டது. வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்நிலையில், விநாயகர் சிலைகளை நிறுவி வழிபட தடை விதித்த அரசு உத்தரவை ரத்து செய்யக்கோரி தூத்துக்குடியை சேர்ந்த் ராமசாமி என்பவர் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து அரசின் உத்தரவில் தலையிட இயலாது என்று கூறிய நீதிபதிகள், மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்தனர்.
கொரோனா நோய்த்தொற்று சூழலில் தமிழக அரசு எடுத்துள்ள முடிவு சரியானதே என்றும், சிலை வைத்து வழிபட அனுமதிக்க முடியாது என்றும் கூறினர். அழகர் கோவில் திருவிழா உட்பட பல கோயில் திருவிழா கொரோனாவால் கொண்டாடப்படவில்லை என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.