search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விநாயகர் ஊர்வலம்"

    • இரவு வீட்டிற்கு வந்த கணவரிடம் அபர்ணா ஏன் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் தகராறு செய்தாய் என தட்டிக்கேட்டார்.
    • நள்ளிரவில் பிரபு அபர்ணா தலையில் கல்லை தூக்கிபோட்டார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி அபர்ணா (வயது 35). கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் அபர்ணா தனது கணவருடன் தலித்வாடா கிராமத்தில் உள்ள தாய் வீட்டிற்கு வந்தார். அன்று மாலை நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பிரபு கலந்து கொண்டு நடனம் ஆடியபடி சென்றார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர்களுக்கும் பிரபுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இந்த தகவல் பிரபுவின் மனைவி அபர்ணாவிற்கு தெரிய வந்தது.

    இரவு வீட்டிற்கு வந்த கணவரிடம் அபர்ணா ஏன் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் தகராறு செய்தாய் என தட்டிக்கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது அபர்ணாவின் தாய் மகளுக்கு சாதகமாக பேசியதால் பிரபு அவமானமாக கருதினார். அருகில் இருந்தவர்கள் கணவன் மனைவியை சமாதானம் செய்து வைத்தனர்.

    அபர்ணாவின் தாய் வீட்டிற்கு வெளியே தூங்கினார். கணவன் மனைவி இருவரும் வீட்டில் உள்ள அறையில் தூங்கினர்.

    நள்ளிரவில் பிரபு அபர்ணா தலையில் கல்லை தூக்கிபோட்டார். இதில் அபர்ணா துடிதுடித்து இறந்தார்.

    இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் பிரபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு 17 வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டு இருந்தன.
    • இன்று சுமார் 30 சதவீத சிலைகள் கரைக்கப்பட்ட நிலையில் நாளையும் பிரமாண்ட ஊர்வலம் நடத்தப்படுகிறது.

    சென்னை:

    விநாயகர் சதுர்த்தியை யொட்டி தமிழகம் முழுவதும் 1 லட்சம் விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டுள்ளன.

    சென்னையில் 1519 விநாயகர் சிலைகளும், ஆவடி கமிஷனர் அலுவலக பகுதியில் 204 சிலைகளும், தாம்பரம் சுற்று வட்டார பகுதியில் 425 சிலைகளும் வைத்து பூஜை செய்யப்பட்டு வந்தது. இதன் மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2148 சிலைகளுக்கு போலீசார் அனுமதி அளித்திருந்தனர்.

    இந்துமுன்னணி, பாரத் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பாரதிய சிவசேனா உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் விநாயகர் சிலைகளை பூஜைக்காக வைத்திருந்தனர்.

    இந்த சிலைகள் அனைத்தையும் ஒருவார கால பூஜைக்கு பின்னர் ஊர்வலமாக எடுத்துச்சென்று கரைப்பது வழக்கம். இதன்படி கடந்த 18-ந்தேதி பூஜைக்காக வைக்கப்பட்ட சிலைகளை இன்றும் நாளையும் ஊர்வலமாக எடுத்துச் செல்ல போலீசார் அனுமதி வழங்கி இருந்தனர்.

    இதன்படி சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் ஊர்வலம் நடபெற்றது. பாரதிய சிவசேனா அமைப்பு மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பூஜைக்காக வைத்திருந்த விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைத்தனர். இதையொட்டி சென்னை மாநகர போலீசார் 16,500 பேர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். ஆவடி கமிஷனர் அலுவலக போலீசார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், தாம்பரத்தில் இருந்து 1,500 போலீசாரும் பாதுகாப்புக்காக ஊர்வலம் செல்லும் பாதைகளில் நிறுத்தப்பட்டிருந்தனர். இதன் மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலைநகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் என 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தன.

    இந்த இடங்களில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு 17 வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டு இருந்தன. இதன் வழியாக விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது.

    நுங்கம்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், புளியந்தோப்பு, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, வடபழனி, சைதாப்பேட்டை, வில்லிவாக்கம், கொளத்தூர், திருமங்கலம், மதுரவாயல், அரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரையில் கரைக்கப்பட்டன.

    அடையாறு, ஆதம்பாக்கம், நங்கநல்லூர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் நீலாங்கரையிலும், வட சென்னை பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் காசிமேடு மற்றும் திருவொற்றியூர் பகுதியிலும் கடலில் கரைக்கப்பட்டன.

    இந்து முன்னணி, பாரத் இந்து முன்னணி அமைப்புகளின் சார்பில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் நாளை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகிறது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகளில் கரைக்கப்பட்டது போக மீதமுள்ள சிலைகள் நாளை கடலில் கரைக்கப்பட உள்ளது.

    இன்று சுமார் 30 சதவீத சிலைகள் கரைக்கப்பட்ட நிலையில் நாளையும் பிரமாண்ட ஊர்வலம் நடத்தப்படுகிறது. இந்த ஊர்வலத்தின்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று விடாமல் தடுப்பதற்காக தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஊர்வல பாதைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

    • காந்திவீதியில் பெருமாள் கோவில் தெருவை கடந்து சென்றபோது இரு தரப்பினருக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது.
    • இருதரப்பினர் கோஷ்டிகளாக மோதிக்கொண்டதால் விநாயகர் சிலை ஊர்வலத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து முன்னணி மற்றும் சதுர்த்தி பேரவை சார்பில் பல்வேறு இடங்களில் 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இந்த விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பதற்காக (விஜர்சனம்) நேற்று மாலை புதுவை சாரம் அவ்வை திடலிருந்து புதுவை கடற்கரைக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

    இந்த நிலையில் புதுச்சேரி முத்தியால்பேட்டை திருவள்ளுவர் நகர் டோபிகானா பகுதியில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலையும், மதுரை வீரன் கோவில் தெருவில் வைக்கப்பட்டு இருந்த சிலையும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

    டோபிகானா பகுதியில் வைக்கப்பட்டு இருந்த சிலையின் முன்பு விஷ்வா ஆதித்யா (வயது 21), அருண், சஞ்சய், அய்யனார் உள்பட பலர் நடந்து சென்றனர்.

    அதுபோல் மதுரை வீரன் கோவில் தெரு விநாயகர் சிலையின் முன்பு அதே பகுதியை சேர்ந்த அசோக் (21), வசந்த் (23), சூர்யா (16) மற்றும் சிலர் சென்றனர்.

    காந்திவீதியில் பெருமாள் கோவில் தெருவை கடந்து சென்றபோது இரு தரப்பினருக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கற்களாலும், கைகளாலும் தாக்கிக்கொண்டனர்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் லேசாக தடியடி நடத்தி மோதலை கட்டுப்படுத்தினர்.

    இந்த மோதலில் இரு தரப்பையும் சேர்ந்த விஷ்வா ஆதித்யா, அருண், சஞ்சய், அய்யனார், அசோக், வசந்த், சூர்யா ஆகிய 7 பேரும் படுகாயம் அடைந்தனர். போலீசார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இருதரப்பினர் கோஷ்டிகளாக மோதிக்கொண்டதால் விநாயகர் சிலை ஊர்வலத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    தொடர்ந்து விநாயகர் சிலை ஊர்வலத்தில் மேலும் மோதல் ஏற்படாமல் தடுக்க புதுவை கடற்கரை சாலை முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டனர். 

    • விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்வதற்கு 17 வழித்தடங்கள் பிரத்யேகமாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது.
    • விநாயகர் சிலைகளை படகில் எடுத்து கரைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    சென்னை:

    விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 18-ந்தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் இந்து அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் 1,519 பிரமாண்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நிறுவப்பட்ட விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

    சென்னையில் நாளை (சனி) மற்றும் நாளை மறுதினம் (ஞாயிறு) ஆகிய தேதிகளில் விநாயகர் சிலைகள் பிரமாண்ட ஊர்வலம் நடைபெற உள்ளது. பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலைநகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் சிலைகளை கரைப்பதற்கு போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.

    விநாயகர் சிலைகள் ஊர்வலம் அசம்பாவித சம்பவங்கள் இன்றி அமைதியான முறையில் நடைபெறும் வகையில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் 16 ஆயிரத்து 500 போலீசார், 2 ஆயிரம் ஊர்காவல் படை வீரர்கள் என மொத்தம் 18 ஆயிரத்து 500 பேர் ஈடுபட உள்ளனர்.

    மேலும், சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்வதற்கு 17 வழித்தடங்கள் பிரத்யேகமாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் சிலை கரைக்கும் இடங்களில் தற்காலிக கட்டுப்பாட்டறைகள் மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளது. சிலைகளை கரைக்கும் பணியில் ராட்சத கிரேன்கள் பயன்படுத்தப்பட உள்ளன. விநாயகர் சிலைகளை படகில் எடுத்து கரைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது மற்ற மாவட்டங்களில் நடைபெற்ற விநாயகர் சிலைகள் கரைப்பு நிகழ்வில் நீரில் மூழ்கி உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. எனவே இதில் சென்னை போலீசார் தனி கவனம் செலுத்தி உள்ளனர். அதன்படி, சிலைகள் கரைக்கும் இடங்களில் அவசர உதவிக்கு தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், மோட்டார் படகுகள், நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் இருப்பார்கள்.

    மேலும் தடையை மீறி யாரேனும் கடலில் இறங்குகிறார்களா? என்பதை கண்காணிப்பதற்கு தற்காலிக கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்படுகிறது. அங்கிருந்து போலீசார் 'பைனாகுலர்கள்' மூலம் கடற்கரை பகுதியை கண்காணிப்பார்கள்.

    விநாயகர் சிலைகள் ஊர்வலம் குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கூறுகையில், 'பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கும் நிகழ்வின்போது உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். காவல்துறையின் கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அமைதியான முறையில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்க வேண்டும்.

    கட்டுப்பாடுகளை மீறுவோர் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • தச்சம்பத்து கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் நடந்தது.
    • உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடந்தது.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே தச்சம்பத்து பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஊர்வலம் நடந்தது. முதல் நாள் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடந்தது. இதைத் தொடர்ந்து ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆசிரமம் செயலாளர் சுவாமி பரமானந்த சுவாமி பக்தி சொற்பொழிவாற்றினார். 2-ம் நாள் விநாயகருக்கு மஞ்சள் அபிஷேகம் கோமாதா பூஜை மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டி நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர்கள் தேனூர் விடி பாலு திருவேடகம் பழனியம்மாள் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 3-ம் நாள் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி புறநகர் மாவட்ட தலைவர் குருஜி ராமச்சந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேல்முருகன், மாவட்டச் செயலாளர் ரமேஷ், ஒன்றிய தலைவர் முத்துப்பாண்டி, ஒன்றிய துணைத் தலைவர் ராஜா, நிர்வாகிகள் தனசேகரன், பொன்னையா, சுரேஷ்குமார், பாபு, காசி, சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தேனூர் கவுன்சிலர்கள் சவுத்ரி நல்ல மணி திருவிடம் கவுன்சிலர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். சிலை ஊர்வலம் கிராமத்தில் வலம் வந்தது. விழா ஏற்பாடுகளை பச்சமுத்து, பாலகிருஷ்ணாபுரம் இந்து முன்னணி மற்றும் விநாயகர் கமிட்டி குழுவினர் செய்திருந்தனர். சமயநல்லூர் ஏட்டு சிவபாலன் மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

    • விநாயகர் சிலைகள் அனைத்தும் நேற்று முதல் குளங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட்டு வருகிறது.
    • பா.ஜ.கவினர் ஊர்வலமாக விநாயகர் சிலைகளை எடுத்து சென்றபோது அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என கூறப்படுகிறது.

    கவுண்டம்பாளையம்:

    விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவை மாநகர், புறநகர் பகுதிகளில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இந்த சிலைகள் அனைத்தும் நேற்று முதல் குளங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட்டு வருகிறது.

    கவுண்டம்பாளையம், உருமாண்டம்பாளையம், பெரியநாயக்கன் பாளையம், வடமதுரை உள்பட பல்வேறு பகுதிகளில் இந்து அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் பூஜைக்கு பிறகு நேற்று துடியலூர் பஸ் நிறுத்தத்திற்கு எடுத்து வரப்பட்டன.

    பின்னர் அங்கிருந்து சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக வெள்ளக்கிணர் பகுதியில் உள்ள குட்டைக்கு எடுத்து செல்லப்பட்டது.

    அப்போது பா.ஜ.கவினர் ஊர்வலமாக விநாயகர் சிலைகளை எடுத்து சென்றபோது அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக துடியலூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் புகார் அளித்தார்.

    அதன் பேரில் நீலகிரி பாராளுமன்ற தொகுதியின் பா.ஜ.க பொறுப்பாளர் நந்தகுமார், கோவை மாவட்ட பா.ஜ.க மகளிர் அணி துணைத்தலைவி வத்சலா, இளங்கோ, சாஜூ, கிருஷ்ணா மற்றும் பலர் மீது அனுமதியின்றி கூடியது, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டது உள்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் ஒரு மோட்டார் சைக்கிள், சிலை எடுத்து செல்லப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    • விநாயகர் சிலை ஊர்வலத்தில் திரளானோர் பங்கேற்றனர்.
    • 100க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தர்மாபுரம் ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் கோவில் நண்பர்கள் நற்பணி மன்ற தலைவரும், சமூக சேவகருமான ராமராஜ் பொதுமக்கள் பங்களிப்போடு கடந்த 35 ஆண்டுகளாக ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் ஊர்வலத்தை சிறப்பாக நடத்தி வருகிறார்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நேற்று நடந்தது. விநாயகர் சிலை ஊர்வலத்தை மதுரை ஆதீனம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    தொடக்க விழாவில் தொழில் அதிபர் குவைத் ராஜா மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலம் நகரில் முக்கிய வீதி வழியாக சென்றது. இதில் வயல்வெளியில் விதை தூவும் விநாயகர் விவசாயி, புல்லட் பைக் ஓட்டும் விநாயகர், ஹெவி வெயிட் சாம்பியன் விநாயகர் என பல்வேறு விநாயகர் சிலைகள் இடம்பெற்றன.

    ஊர்வலத்தில் பிரமாண்ட சோபக்கிருது விநாயகர் முன்னே சென் றது. இந்த வாகனத்தில் சாரதியாக சமூக சேவகர் ராமராஜ் இருந்தார். அதனைத் தொடர்ந்து மற்ற விநாயகர் சிலைகள் ஊர்வலமாக வந்தன

    இறுதியில் ஆகம விதி முறைப்படி ஐ.என்.டி.யூ. சி. நகர் முன்புள்ள புதியா தியார் குளத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

    விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்கா ணிப்பாளர் சீனிவாச பெருமாள் உத்தரவின் படி ராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ப்ரீத்தி தலைமையில் 3

    டி.எஸ்.பி.க்கள் 10 ஆய்வா ளர்கள் என 100க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கடந்த 4 நாட்களாக மூன்று வேலை அன்ன தானம், பெண்களுக்கு இலவச தையல் எந்திரம், ஏழை எளியவர்களுக்கு சீர்வரிசைகளோடு இலவச திருமணங்கள், தொழிலாளி களுக்கு இலவச சைக்கிள் கள் வழங்கி பக்தர்கள் வியக்கும் வகையில் வீதி உலாவை நடத்திய மன்ற தலைவரும், சமூக சேவ கருமான ராமராஜூக்கும், மன்ற நிர்வாகிகளுக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

    • மின் வயர்களை உயர்த்தி கட்ட வேண்டும்
    • ஆக்கிரமிப்புகளை அகற்ற உதவி கலெக்டர் உத்தரவு

    வேலூர்:

    விநாயகர் சதுர்த்தியையொட்டி வேலூர் மாநகர பகுதியில் ஆண்டுதோறும் 1500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடைபெறும்.

    வழிபாடு முடிந்த பிறகு விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சதுப்பேரி ஏரியில் கரைக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நடைபெறும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் அசம்பாவித சம்பவங்களை தடுக்க உதவி கலெக்டர் கவிதா, வேலூர் டவுன் டிஎஸ்பி திருநாவுக்கரசு, தாசில்தார் செந்தில் உள்ளிட்ட அதிகாரிகள் ஊர்வல பாதையை ஆய்வு செய்தனர்.

    வேலூர் சைதாப்பேட்டை முருகர் கோவிலில் மெயின் பஜார் லாங்கு பஜார் அண்ணா கலையரங்கம் கோட்டை சுற்றுச்சாலை மாங்காய் மண்டி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலை மற்றும் சிலைகள் கரைக்கப்படும் சதுப்பேரி ஏரி ஆகிய இடங்களை ஆய்வு செய்தனர்.

    அப்போது விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உதவி கலெக்டர் கவிதா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சாலையோரங்களில் உள்ள தள்ளுவண்டிக் கடைகளை அகற்ற வேண்டும். ஊர்வல பாதையில் தாழ்வான நிலையில் செல்லும் மின் வயர்களை உயர்த்தி கட்ட வேண்டும் என உத்தரவிட்டார்.

    ×