என் மலர்
நீங்கள் தேடியது "Vinayagar Chaturthi"
- இரவு முதலே லாரி லாரியாக குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன.
- 3 பொக்லைன் எந்திரங்கள் மூலமும் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகின்றன.
இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 27-ந் தேதி கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
இந்து முன்னணி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்ட இந்த சிலைகளுக்கு கடந்த 5 நாட்களாக பூஜை செய்யப்பட்டன.
இந்த விநாயகர் சிலைகள் சென்னையில் நேற்று ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பட்டினப்பாக்கம், காசிமேடு, எண்ணூர், திருவொற்றியூர், பாலவாக்கம் உள்ளிட்ட கடற்கரைகளில் கரைக்கப்பட்டன.
மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, கோயம்பேடு, அண்ணா நகர், கொளத்தூர், பூக்கடை, புளியந்தோப்பு, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வழிபாட்டுக்காக வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஆட்டோக்கள் மினி லாரிகள் மற்றும் லாரிகளில் வைத்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு பட்டினப்பாக்கம் கடலில் கரைக்கப்பட்டன.
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் முழுவதும் கரையாத விநாயகர் சிலைகளின் எஞ்சிய பாகங்கள், மாலைகள், மரக்கட்டைகள், இரும்பு கம்பிகள் என டன் கணக்கில் குப்பைகள் குவிந்துள்ளன.
இந்நிலையில் கரை ஒதுங்கிய குப்பைகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரவு முதலே லாரி லாரியாக குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன. 3 பொக்லைன் எந்திரங்கள் மூலமும் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகின்றன.
குப்பைகளை 100-க்கணக்கான லாரிகள் மூலம் அகற்றும் பணியில் துப்புரவு பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
- விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு 4 கடற்கரை பகுதிகளில் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.
- விநாயகர் சிலை கரைக்கும் இடங்களை சுற்றி சுமார் 10 கி.மீ சுற்றளவிற்கு எந்தவித வணிக வாகனங்களும் செல்ல அனுமதி இல்லை.
சென்னை:
விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 27-ந்தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னையில், இந்து அமைப்புகள் சார்பில் 1,519 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வருகிறது. இந்த விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், திருவான்மியூர் பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.
விநாயகர் சிலைகள் ஊர்வலத்தையொட்டி சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றத்தை போலீசார் அறிவித்துள்ளனர்.
அதன் விவரம் வருமாறு:-
* திருவல்லிகேணியில் இருந்து சாந்தோம் நெடுஞ்சாலை வரை வாகன போக்குவரத்து மெதுவாக இருப்பதால், காந்தி சிலை, ஆர்.கே.சாலை சந்திப்பிலிருந்து (வலது புறம் திரும்பி), வி.எம்.தெரு, லஸ் ஜங்சன், அமிர்தாஞ்சன் சந்திப்பு, டிசில்வா சாலை, வாரன் சாலை, டாக்டர் ரங்கா சாலை (வலது புறம் திரும்பி), பீமண்ண கார்டன் சந்திப்பு, சி.பி.ராமசாமி சாலை (இடது புறம் திரும்பி), செயிண்ட் மேரிஸ் சந்திப்பு, காளியப்பா சந்திப்பு, சீனிவாசா அவென்யூ (இடது திருப்பம்), ஆர்.கே.மடம் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
* அடையாறில் இருந்து சாந்தோம் நெடுஞ்சாலை நோக்கி வரும் வாகனங்கள் ஆர்.கே.மடம் சாலை, திருவேங்கடம் தெரு (இடது புறம் திரும்பி), வி.கே.ஐயர் சாலை சந்திப்பு, தேவநாதன் தெரு, செயிண்ட் மேரிஸ் சாலை (வலது புறம் திரும்பி), ஆர்.கே.மடம் சாலை (இடது புறம் திரும்பி), தெற்கு மாட சந்திப்பு, வெங்கடேச அக்ரஹாரம் சாலை (இடது புறம் திரும்பி), கிழக்கு அபிராமபுரம், லஸ் அவென்யூ, பி.எஸ்.சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, டாக்டர் ஆர்.கே.சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
வணிக வாகனங்களுக்கு அனுமதி இல்லை
* சிலை ஊர்வலம் ரத்னா கபே சந்திப்பை கடக்கும்போது, ஜாம்பஜார் போலீஸ் நிலையத்தில் இருந்து ரத்னா கபே சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக, இந்த வாகனங்கள் ஜானி ஜான்கான் ரோடு வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
* சிலை ஊர்வலம் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையை கடக்கும்போது, ஐஸ்ஹவுஸ் சந்திப்பில் இருந்து ரத்னா கபே சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக, இந்த வாகனங்கள் பெசன்ட் ரோடு-காமராஜர் சாலை வழியாக திருப்பிவிடப்படும் அல்லது இடதுபுறம் ஜி.ஆர்.எச். சந்திப்பை நோக்கி சென்று தங்களின் இலக்கை அடையலாம்.
* விநாயகர் சிலை கரைக்கும் இடங்களை சுற்றி சுமார் 10 கி.மீ சுற்றளவிற்கு எந்தவித வணிக வாகனங்களும் செல்ல அனுமதி இல்லை.
இவ்வாறு போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.
- விநாயகர் சிலைகளுக்காக அலங்கார பந்தல்கள் அமைக்கப்பட்டு சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.
- விநாயகர் சிலை ஒன்றின் கையில் பூனை ஒன்று அமைதியாக படுத்து தூங்கும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, புனே, நாக்பூர், நாசிக் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பிரமாண்டமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டைக்கு வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டன.
மேலும் விநாயகர் சிலைகளுக்காக அலங்கார பந்தல்கள் அமைக்கப்பட்டு சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி பந்தலில் உள்ள விநாயகர் சிலை ஒன்றின் கையில் பூனை ஒன்று அமைதியாக படுத்து தூங்கும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், விநாயகர் சிலையின் கையில் பூனை தூங்கும் காட்சிகள் உள்ளது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் நகைச்சுவையான கருத்துக்களை பதிவிட்டனர். ஒரு பயனர், சகோதரர் பாதுகாப்பான கைகளில் இருக்கிறார் என பதிவிட்டார். மற்றொருவர், அவர்கள் ஆறுதல் இருக்கும் இடத்தில் குடியேறுகிறார்கள் என பதிவிட்டிருந்தார்.
- இந்து முன்னணியினர், போலீசாரின் தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
- விநாயகர் சிலை ஊர்வலம் திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலைக்கு வந்ததும், அங்கு தயார் நிலையில் இருந்த போலீசார் ஊர்வலத்தை தடுத்து நிறுத்தினர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இன்று மாவட்டம் முழுவதும் இந்து அமைப்புகள் சார்பில் பல்வேறு இடங்களில் 2234 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த அனுமதி கேட்டிருந்தனர். இதற்கிடையே திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்கள், விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தி வருகின்றனர். ஆனால், இந்து அமைப்புகள் சார்பில் அங்கு விநாயகர் சிலை ஊர்வலம் நடத்துவதற்கு போலீசார் தடை விதித்து உள்ளனர்.
இதை ஏற்காத இந்து முன்னணியினர், போலீசாரின் தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதையடுத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மகேஸ், நகர் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இதற்கிடையே இந்து முன்னணி நகர தலைவர் ஞானசுந்தரம் தலைமையில் மாவட்டத் துணைத் தலைவர்கள் ரவிச்சந்திரன், ராஜேந்திரன் மற்றும் இந்து முன்னணியினர் மேளதாளம் முழங்க வேனில் 3½ அடி விநாயகர் சிலையை குடைப்பாறைப்பட்டிக்கு கொண்டு வந்து அங்குள்ள காளியம்மன், பகவதியம்மன் கோவிலில் வைத்தனர். பின்னர் அந்த சிலையை கருப்பணசாமி கோவிலுக்கு கொண்டு வந்து வைத்து சிறப்பு பூஜை செய்தனர். அதையடுத்து கோவிலில் இருந்து விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கியது. இந்த விநாயகர் சிலை ஊர்வலம் திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலைக்கு வந்ததும், அங்கு தயார் நிலையில் இருந்த போலீசார் ஊர்வலத்தை தடுத்து நிறுத்தினர்.
மேலும் தடையை மீறி ஊர்வலமாக கொண்டு வந்த விநாயகர் சிலையை போலீசார் பறிமுதல் செய்தனர். இதற்கு இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்ட செயலாளர் வீரதிருமூர்த்தி மற்றும் 24 பெண்கள் உள்பட 40 பேரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். அதேநேரம் இந்து முன்னணியினரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட விநாயகர் சிலையை போலீசார் சரக்கு வாகனத்தில் கொண்டு சென்று மேற்கு தாசில்தார் ஜெயப்பிரகாஷ் முன்னிலையில் கோட்டைக்குளத்தில் பூஜைகள் செய்து கரைத்தனர். இந்த சம்பவத்தால் குடைப்பாறைப்பட்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் வினோத்ராஜ் நிருபர்களிடம் தெரிவிக்கையில், குடைப்பாறைப்பட்டியில் இந்துக்கள் தான் அதிகம் உள்ளனர். ஆனால் ஒரு விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து ஊர்வலமாக எடுத்துச்செல்ல போலீசார் அனுமதி மறுக்கின்றனர். ஊர்வலம் செல்பவர்களை கைது செய்கின்றனர். இந்த பிரச்சினைக்கு மாவட்ட நிர்வாகமோ, போலீசாரோ நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்து முன்னணி சார்பில் தினமும் ஒரு விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து ஊர்வலமாக எடுத்துச்செல்வோம் என்றார்.
- சிலைகளை வடிப்பது - பார்வதி பிள்ளையாரை படைத்த நிகழ்வை குறிக்கிறது.
- உயிர்த்தன்மையின் சமநிலையை குறிக்கும் புத்திசாலித்தனத்தை நமக்குள் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
கோவை:
விநாயகர் சதுர்த்தி திருநாளில் தடைகள் நீங்கட்டும், புத்தி மலரட்டும் என சத்குரு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி வாழ்த்து செய்தியில் சத்குரு கூறியிருப்பதாவது, "விநாயகர் ஞானத்திற்கான கடவுள், கல்வியும் அறிவும் அருள்பவர், தடைகளை நீக்குபவர். விநாயகர் சதுர்த்தி பண்டிகையை நம் தேசத்தில் கோலாகலமாக கொண்டாடுகிறோம். ஒவ்வொரு வருடமும் பருவமழை பொழிந்து முடித்து, கார்மேகங்கள் மறைய தொடங்கியவுடன், நாடெங்கும் உற்சாகமும் எதிர்பார்ப்பும் காற்றில் பரவ, லட்சக்கணக்கானவர்கள் அன்பிற்குரிய ஆனைமுகத்தானை கொண்டாட தயாராகிக் கொண்டிருப்பார்கள். இப்படி விழாக்கோலமும், பலகாரங்களும் ஒரு பக்கம் இருந்தாலும், இதன் பின்னணியில் இருக்கும் கதை ஒன்று வெறும் புராணமாக இருந்துவிடாமல், புத்தி, படைப்பாற்றல் மற்றும் மாற்றத்திற்கான மகத்தான அறிகுறியாக திகழ்கிறது.
கதை இப்படி ஆரம்பிக்கிறது. சிவன் - அவர் பரமயோகி - தன் இல்லத்தையும், மனைவி பார்வதியையும் விட்டு நீண்ட காலம் சென்றிருக்கிறார். தனிமையும், தாய்மைக்கான ஏக்கமும் அதிகரித்ததால் அவள் அசாதாரண படி ஒன்றை எடுக்கிறாள். தன் உடலில் பூசியிருந்த சந்தனத்தை சேகரித்தாள். தனது தோலின் அம்சங்களை கொண்டிருந்த அந்த சந்தனத்தை மண்ணுடன் கலந்தாள், அதை ஒரு பிள்ளை வடிவத்தில் பிடித்து வைத்தாள். அவள் வடித்த இந்த உருவத்திற்கு உயிர் ஊட்டினாள்.
சிவன் பல வருடங்கள் கழித்து வீடு திரும்புகிறார். தன் தாய்க்கு காவலாக வாசலில் ஒரு பாலகன் நின்று கொண்டிருந்தான். இருவரும் நேருக்கு நேர் நின்றுகொண்டிருக்கிறார்கள், ஒருவரையொருவர் அறிந்திருக்கவில்லை. கோபத்தில் சிவன் பாலகனின் தலையை துண்டித்துவிடுகிறார். பார்வதியின் துக்கமும் ஆத்திரமும் தீவிரமாக இருந்தது. இந்த துன்பத்தை சரிசெய்ய நினைக்கிறார் சிவன். அவருடன் எப்போதும் கூடவே இருக்கும் கணங்கள், அந்த கணங்களின் தலைவரான ஒருவரின் தலையை எடுத்து பாலகனின் தலைக்கு பதிலாக மாற்றிவைத்தார் சிவன்.
சிவ கணங்கள் - அவர்கள் விசித்திரமான வேற்றுகிரக வாசிகள் - இவர்களின் உடல் அமைப்பு மனிதர்களைப் போல் அல்லாமல் எலும்புகளற்ற கைகள் கொண்டவர்களாக கூறப்படுகிறார்கள். இதுவே ஓவியர்கள் விநாயகரை தும்பிக்கை கொண்டவராக, ஆனைமுகத்தானாக சித்தரிக்க காரணமானது. ஆனாலும், இன்றும் ஒவ்வொரு மந்திரமும், ஒவ்வொரு பக்திப் பாடலும், அவரை கணபதி என்றுதான் சொல்கிறதே தவிர, கஜபதி என்று அல்ல.
விநாயகர் தோன்றியது இப்படித்தான்: பார்வதியின் உயிர்-படைக்கும் ஆற்றல் மூலம் தோன்றி, சிவகணத்தின் தலையை கொண்டவர் ஆனார் - புத்திசாலித்தனம், உயிர்மூலம் ஆகியவற்றின் அறிகுறி ஆனார். சமநிலையான புத்திசாலித்தனத்தின் வடிவமானவர் கணபதி.
விக்னங்களை, அதாவது தடைகள் அனைத்தையும் தகர்ப்பவர் - அதனால் விக்னேஸ்வரன் என்று வணங்கப்படுகிறார். அப்படியென்றால், கஷ்டங்களை மாயமாக மறையச் செய்துவிடுவார் என்று அர்த்தம் அல்ல. அவர் கூறும் ஞானம் சூட்சுமமானது: அதாவது, நமக்குள் புத்திசாலித்தனம், சமநிலை, தெளிவு ஆகியவற்றை நாம் வளர்த்துக்கொள்ளும் போது, தடைகள் தாமாகவே கரைந்து போய்விடும். அவை இனி தடைகளாக இல்லாமல் படிக்கற்களாக மாறிவிடும். இங்கு புத்திசாலித்தனம் என்பது தந்திரமாக இருப்பதையோ, சாமர்த்தியமான கணக்குகளையோ குறிக்கவில்லை - இந்த பிரபஞ்சத்துடன் ஒத்திசைவில் இருப்பதையே குறிக்கிறது - உள்ளுக்குள் அமையும் சமநிலை காரணமாக நமக்குள்ளும், வெளிபுறத்திலும் வாழ்க்கையை சுகமாக கடக்க முடிகிறது.
இந்த புரிதலே விநாயகர் சதுர்த்தியின் ஐதீகமாக வெளிப்படுகிறது. பல நாட்களுக்கு பக்தர்கள் விநாயகர் சிலைகளை வடிப்பார்கள், ஆடல் பாடலுடன் அவரை ஆராதிப்பார்கள், அவருக்கு உணவு படைப்பார்கள், பக்திப் பரவசத்துடன் அவரை கொண்டாடுவார்கள். அதேசமயம், அந்த மூர்த்தியை நீரில் கரைப்பதுடன் விழா நிறைவு பெறும். சிலைகளை வடிப்பது - பார்வதி பிள்ளையாரை படைத்த நிகழ்வை குறிக்கிறது. நீரில் அமிழ்த்துவது - சிவன் நிகழ்த்திய செயலான அழித்தலையும், புதுப்பித்தலையும் குறிக்கிறது. இவை இரண்டும் சேர்ந்து ஒரே சுழற்சியை குறிக்கின்றன - உருவத்தைப் படைப்பது, அதன் மூலம் கற்றுக்கொள்வது, கடைசியில் அதை விடுவிப்பது.
விநாயகர் சதுர்த்தி மூலம் நாம் இதைத்தான் கற்றுக்கொள்கிறோம். அதாவது, உண்மையான புத்திசாலித்தனம் என்பது ஒருபோதும் இறுக்கமானது அல்ல, பற்றுகள் சார்ந்தது அல்ல. அது நீர் போல இளகிய தன்மை கொண்டது, கட்டுகள் அற்றது - அதாவது, தொடர்ச்சியாக படைப்பிற்கு உள்ளாகி, அதன்பின் கரைந்துபோகும் உயிர்த்தன்மையை போன்றதே புத்திசாலித்தனமும்.
பிள்ளையார் வடிவத்தை உருவாக்கி அதன்பின் அதை நீரில் கரைக்கும் வழக்கம் ஒருவிதத்தில் இந்த பிரபஞ்சத்தின் அறுதியற்று மாறக்கூடிய இயல்பை குறிக்கிறது - சும்மா கண்மூடித்தனமாக உருவங்களை பற்றிப்பிடித்துக் கொண்டிருக்காமல், அந்த உருவத்தின் குணங்களை உள்வாங்கிக்கொண்டு, அவற்றை விட்டுவிட வேண்டும் என்கிறது.
மொத்தத்தில், விநாயகர் சதுர்த்தி என்பது உருவத்திலிருந்து உருவமற்ற தன்மைக்கு நகர்வதைக் கொண்டாடும் விழாவாக உள்ளது. உண்மையான புத்திசாலித்தனம் என்பது அறிவை சேகரிப்பது அல்ல, சாமர்த்தியமாக இருப்பதும் அல்ல; இந்த பிரபஞ்சத்துடன் ஒன்றாக இசைந்து வாழும் திறனாகும் - எதிர்ப்பில்லாமல் மிதந்து வாழ்ந்து, தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி, நம் கட்டுப்பாடுகளை கடந்து விரிவடைவது ஆகும்.
இப்படியாக, இந்த கோலாகலமான பண்டிகையை கொண்டாடுங்கள், கொழுக்கட்டைகளை உள்ளே தள்ளுங்கள், அழகு அழகான விநாயகர் சிலைகளின் கலைவண்ணத்தை கண்டுகளியுங்கள். கூடவே கணபதி என்பவர் உணர்த்தும் ஆழ்ந்த உட்பொருளை கருத்தில் கொள்ளுங்கள் - தடைகளை கரைந்துபோகச் செய்யும், ஒற்றுமையைக் கொண்டாடும், உயிர்த்தன்மையின் சமநிலையை குறிக்கும் புத்திசாலித்தனத்தை நமக்குள் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
படைப்பின் சமநிலையை, எல்லையற்ற புத்திசாலித்தனத்தை, இந்த விநாயகர் சதுர்த்தி திருநாள் உங்களுக்குள் உயிர்த்தெழச் செய்யட்டும்! வாழ்த்தும் ஆசியும்!" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- திரை உலக பிரபலங்கள் பலரும் விநாயகர் சிலைகளை வாங்கி வீடுகளில் பூஜை செய்தனர்.
- பாலிவுட் திரையுலகில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் சில தினங்களுக்கு முன்பு களைகட்ட தொடங்கி விட்டது.
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திரை உலக நடிகர் நடிகைகள் பலர் தங்களது வீடுகளில் விநாயகருக்கு பூஜை செய்து வழிபட்டனர்.
தமிழ் திரை உலக பிரபலங்கள் பலரும் விநாயகர் சிலைகளை வாங்கி வீடுகளில் பூஜை செய்தனர்.
பாலிவுட் திரையுலகில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் சில தினங்களுக்கு முன்பு களைகட்ட தொடங்கி விட்டது. நடிகர், நடிகைகள் பலர் பூஜை செய்வதற்காக விநாயகர் சிலைகளை வாங்கி சென்ற புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.
நடிகை ஹன்சிகா நேற்று மும்பை வீதிகளில் விநாயகர் சிலையை புதிதாக வாங்கி காரில் எடுத்துச் சென்றார்.
நடிகை ரகுல் பிரீத் சிங் கணவர் ஜாக்கி பக்னாணியுடன் இன்று காலை விநாயகருக்கு பூஜை செய்து வழிபட்டார்.
இதுபோன்று ஷ்ரத்தா கபூர், கத்ரீனா கைப் ஆகியோர் விநாயகர் சிலை உடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
நடிகை ராதா இன்று காலை அவரது வீட்டில் விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்த வீடியோ காட்சிகளை வெளியிட்டு இன்று விநாயகர் சதுர்த்தியை யொட்டி எங்கள் வீட்டில் விநாயகருக்கு பூஜை செய்கிறோம் என பதிவிட்டுள்ளார்.
- விநாயகருக்கு 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது.
- காலை முதலே ஏராளமான பக்தர்கள் திரண்டு விநாயகரை வழிபட்டனர்.
கோவை:
விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதிகாலை முதலே பக்தர்கள் கோவில்களில் திரண்டு வழிபாடு செய்தனர்.
கோவை புளியகுளத்தில் பிரசித்தி பெற்ற முந்தி விநாயகர் கோவில் உள்ளது. இங்குள்ள விநாயகர் சிலை ஆசியாவிலேயே மிகப்பெரியது ஆகும். 19 அடி உயரத்தில் 190 டன் எடை கொண்டது.
இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான சதுர்த்தி விழா தொடங்கி நடந்து வந்தது. இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோம பூஜை நடந்தது. 4.30 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அரிசி மாவு, திருமஞ்சனப்பொடி, மஞ்சள், பஞ்சாமிர்தம், நெய், தேன், பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் 4 டன் மலர்களால் விநாயகருக்கு ராஜஅலங்காரம் செய்யப்பட்டது. முகத்தில் மட்டும் 40 கிலோ சந்தனத்தை கொண்டு சந்தனக்காப்பு அலங்காரம் செய்திருந்தனர்.
மேலும் விநாயகருக்கு கொழுக்கட்டை, லட்டு, அதிரசம், வடை, எள் உருண்டை, முறுக்கு என 36 வகையான நைவேத்ய பிரசாதங்கள் படைக்கப்பட்டு பூஜை நடந்தது. 5.45 மணிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். காலை முதலே ஏராளமான பக்தர்கள் திரண்டு விநாயகரை வழிபட்டனர். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்தது. இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று தரிசனம் செய்தனர்.
இதேபோல ஈச்சனாரி விநாயகர் கோவில், ரேஸ்கோர்ஸ் 108 விநாயகர் கோவில் உள்பட கோவையில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் இன்று சிறப்பு பூஜைகள் நடந்தன.
- அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
- வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து
ஔவையார் அருளிய வினை தீர்க்கும் விநாயகர் அகவல்
சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலஇசை பாட
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழ(கு) எறிப்ப
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழம் நுகரும் மூஷிக வாகன
இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித்
தாயாய் எனக்குத் தானெழுந்து அருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதல்ஐந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறம் இதுபொருள்என
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டிஎன் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆறா தாரத்து அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையில் சுழிமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்
குண்டலி அதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூட்சமும்
எண்முக மாக இனிதெனக்கு அருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரிஎட்டு நிலையும் தரிசனப் படுத்தி
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதெனக்கு அருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டுக்கும் ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்தை அழுத்திஎன் செவியில்
எல்லை இல்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக! விரை கழல் சரணே!
- ஔவை பிராட்டி தானும் அவர்களுடன் கயிலை மலைக்குச் சென்று, சிவதரிசம் பெற எண்ணினார்.
- ஔவையாரும் மனமகிழ்ந்து விநாயகர் பூஜையை வழமை போல சிறப்பாக செய்து முடித்தார்.
புராண காலத்தில் திருமாக்கோதை என்னும் சேரமான் பெருமாள் என்ற மன்னர், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மிகவும் நெருங்கிய நண்பராவார்.
ஒருநாள் சுந்தரமூர்த்தி சுவாமிகள் இல்லற வாழ்வை முடித்து சிவனை தரிசிக்க கைலாயம் செல்ல எண்ணி சிவபெருமானை புகழ்ந்து பாடி வேண்டினார். அவரது வேண்டுதலை ஏற்றுக்கொண்ட சிவன் அவரை கைலாயத்திற்கு அழைத்துச்செல்ல ஐராவதம் என்னும் தேவலோக யானையையும், தேவர்களையும் அனுப்பினார்.
சுந்தரரும் யானைமீது ஏறி ஆகாய மார்க்கமாக கயிலாயம் புறப்பட்டார். இதனை அறிந்த மன்னன் சேரமான் பெருமாள் வானத்தில் இந்த அதிசயத்தை பார்த்தார். அவருக்கு சுந்தரரை பிரிய மனமில்லாமல் அவருடன் தானும் கைலாயம் செல்லும் நோக்கில் தன் குதிரையில் ஏறி அதன் காதில் "சிவயநம" என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதினார். உடனே குதிரையும் சுந்தரரைத் தொடர்ந்து கைலாயத்தை நோக்கி புறப்பட்டது.
இவ்வாறு ஆகாய மார்க்கமாக சென்று கொண்டிருந்த சுந்தரரும், சேரமான் பெருமாளும், ஓரிடத்தில் ஔவையார் விநாயகர் பூஜையில் இருப்பதைக் கண்டு "நீயும் வாயேன் பாட்டி" என்று அழைத்தனர். பூஜையை முடித்து விட்டு வருகிறேன் என்று ஔவைப்பிராட்டி பதில் அளித்தார்.
ஔவை பிராட்டி தானும் அவர்களுடன் கயிலை மலைக்குச் சென்று, சிவதரிசம் பெற எண்ணினார். அதனால் பூஜையில் வேகத்தைக் கூட்டினார். விநாயகப் பெருமான் 'ஔவையே விரைவாக பூஜை புரிய காரணம் யாது?' என வினவ, கயிலை செல்லும் ஆவலை மூதாட்டியும் தெரிவித்தாள்.
ஔவையே பதட்டம் கொள்ளாது நிதானமாக பூஜை செய்வாய். யாம் சுந்தரருக்கு முன் உம்மை கயிலை சேர்ப்போம்' என திருவாய் மலர்ந்து அருளினார்.
ஔவையாரும் மனமகிழ்ந்து விநாயகர் பூஜையை வழமை போல சிறப்பாக செய்து முடித்தார். பூஜையினால் அகமகிழ்ந்த விநாயகர் யோகத்தை (யோக மார்க்கம் மூலமாக முத்தியடையும் வித்தை) ஔவையாருக்கு எடுத்துக் கூற, ஔவையார் அதனை "விநாயகர் அகவல்" என்ற நூலாக இவ்வுலகுக்கு அருளினார்.
இறுதியில் விநாயகர் தன் துதிக்கையினால் ஔவையாரை தூக்கி கைலையில் சேர்த்தார். ஔவையாரும் கயிலை காட்சி கண்டு சிவனுடன் இணைந்தார் என புராண கதைகள் கூறுகின்றன.
- பஞ்சாங்க முறைப்படி 11 வகையான திரவியங்களுடன் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
- தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உலக புகழ்பெற்ற பிள்ளையார்பட்டியில் கற்பக விநாயகர் கோவில் அமைந்துள்ளது. குடவரை கோவிலான இங்கு விநாயகப்பெருமான் மற்ற இடங்களில் காணப்படுவதைப்போல நான்கு கைகளுடன் இல்லாமல் இரு கைகளுடன் காணப்படுகிறார். விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக விநாயகர் சதுர்த்தி விழா கடந்த ஆகஸ்ட் 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றிலிருந்து தினசரி பகல் மற்றும் இரவில் உற்சவர் கற்பக விநாயகர் திருநாள் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இரண்டாம் நாள் விழாவில் இருந்து இரவில் மூஷிக வாகனம், சிம்ம வாகனம், பூத வாகனம், கமல வாகனம், ரிஷப வாகனம், மயில் வாகனம், குதிரை வாகனங்களில் உற்சவர் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
குறிப்பாக ஆறாம் நாள் கஜமுக சூரசம்காரத்தில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியும், 9-ம் நாளான நேற்று மாலை விநாயகரும், சண்டிகேஸ்வரரும் வெவ்வேறு இருதேர்களில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி ரத வீதியில் உலா வந்தனர். அப்போது திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். இதில் சண்டிகேசுவரர் தேரை பெண்கள் மட்டுமே இழுத்து வந்தனர்.
தொடர்ந்து இரவு வருடத்திற்கு ஒருமுறை மட்டும் நடைபெறும் சந்தனக் காப்பு அலங்காரம் மூலவருக்கு நடத்தப்பட்டது. இரவில் யானை வாகனத்தில் விநாயகர் வீதியுலா வந்தார். பத்தாம் நாளான இன்று சதுர்த்தி தினத்தை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீப ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உற்சவருக்கு சிறப்பு அலங்காரமும் தீப ஆராதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக தங்க மூஷிஷ வாகனத்தில் நாதஸ்வரம் முழங்க விநாயகப் பெருமானும், வெள்ளி பல்லக்கில்அங்குச தேவரும், சிவனின் அஸ்திரதேவரும் புறப்பாடாகி கோவில் எதிரே உள்ள திருக்குளப்படித்துறையில் எழுந்தருளினர். அங்கு காலை 10 மணிக்கு பஞ்சாங்க முறைப்படி 11 வகையான திரவியங்களுடன் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. மதியம் முக்குறுணி மோதகம் படையலும் நடைபெறுகிறது.
சதுர்த்தி விழாவையொட்டி கைகளில் அருகம்புலுடன் விநாயகரை தரிசிக்க நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்துள்ளனர்.
சதுர்த்தி தினத்தை முன்னிட்டு மாவட்ட சூப்பிரண்டு தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சி.சி.டி.வி. கேமரா அமைக்கப்பட்டுள்ளது. 5-க்கும் மேற்பட்ட இடங்களில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள், பொதுமக்கள் சிரமமின்றி வந்து செல்வதற்கான வழிகள், குடிநீர் மற்றும் கழிவறை உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் கோவில் நிர்வாகத்தால் செய்து தரப்பட்டுள்ளது.
- விநாயகப் பெருமான் பிள்ளையார், விக்னேஸ்வரர், ஐங்கரன், கணபதி போன்ற பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
- ஏழை, எளிய மக்களுக்கு வசதிக்கேற்றவாறு தானங்கள் செய்யலாம்.
இந்து மதத்தில் முழுமுதற் கடவுளாக போற்றப்படுபவர் விநாயகப் பெருமான். ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகர் அவதரித்ததாக கூறப்படுகிறது. ஆண்டுதோறும் இந்நாளையே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம். விநாயகர் சதுர்த்தி விழாவானது இந்தியா முழுவதும் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.
பொதுவாக எந்த கடவுளாக இருந்தாலும், அவர்களை வழிபடுவதற்கு கோவிலுக்கு செல்ல வேண்டும். ஆனால் விநாயகப் பெருமானை வழிபடுவதற்கு அந்த அவசியம் இல்லை. ஏனென்றால் ஊரில் உள்ள சாலையோரம், ஆற்றங்கரை, குளக்கரை, அரச மரத்தடி போன்ற எல்லா இடங்களிலும் எளிமையாக அருள்புரிபவர் விநாயகப் பெருமான். சிவபெருமானை வழிபடுவதை 'சைவம்' என்றும், விஷ்ணு பகவானை வழிபடுவதை 'வைணவம்' என்றும் சொல்வதை போல விநாயகப் பெருமானை வழிபடுவதை 'காணாபத்யம்' என்று அழைப்பார்கள்.
விநாயகப் பெருமான் பிள்ளையார், விக்னேஸ்வரர், ஐங்கரன், கணபதி போன்ற பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். விநாயகர் என்றால் 'மேலான தலைவர்' என்றும், விக்னேஸ்வரர் என்றால் 'இடையூறுகளை நீக்குபவர்' என்றும், பிள்ளையார் என்றால் 'குழந்தை மனம் படைத்தவர்' என்றும், ஐங்கரன் என்றால் 'ஐந்து கரங்களை உடையவர்' என்றும், கணபதி என்றால் 'கணங்களுக்கு அதிபதி' என்றும் பொருள்படும். விநாயகப் பெருமான் அவதாரம் குறித்து பல்வேறு புராணக் கதைகள் உள்ளன.
ஒரு சமயம் சிவபெருமான் கைலாயத்தில் இருந்து வெளியே சென்றிருந்தபோது, பார்வதி தேவி நீராடச் சென்றார். அப்போது அவர், தனக்கு காவல் காக்க ஒருவரும் இல்லையென்பதால், தனது உடலில் இருந்து வாசனை துகள்களை உருட்டி ஒரு உருவத்தை உருவாக்கினார். பின்பு தன்னுடைய அனுக்கிரகத்தால் அதற்கு உயிரூட்டினார். இவ்வாறு உருவம் பெற்றவரே விநாயகர். விநாயகரிடம், யாரையும் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கக் கூடாது என கட்டளையிட்டு நீராட சென்றார், பார்வதி தேவி.
அச்சமயம் கைலாயத்திற்கு திரும்பிய சிவபெருமான் உள்ளே நுழைய முயன்றார். வந்திருப்பது தன் தந்தை என்பதை அறியாத விநாயகர், அவரை உள்ளே செல்ல அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினார். இதனால் சிவபெருமானுக்கும், விநாயகருக்கும் சண்டை மூண்டது. இறுதியில் கோபம் கொண்ட சிவபெருமான், தனது சூலாயுதத்தால் விநாயகரின் தலையை கொய்தார்.
அப்பொழுது பார்வதி தேவி நீராடி முடித்துவிட்டு வெளியே வந்தார். தன் மகனான விநாயகர், தலை இல்லாமல் கிடப்பதை கண்டு கடும் கோபமும், ஆவேசமும் கொண்டார். தான் உருவாக்கிய விநாயகரை சிவனே சிதைத்து விட்டதை அறிந்த பார்வதி தேவி, காளியாக உருவம் எடுத்து கண்ணில் படுவதையெல்லாம் அழிக்கத் தொடங்கினார்.
காளியின் ஆவேசத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர். காளியை சாந்தப்படுத்துவதற்கு முடிவு செய்த சிவன், தனது கணங்களை அழைத்து வட திசையாகச் சென்று முதலில் தென்படுகின்ற ஜீவராசியின் தலையைக் வெட்டி கொண்டு வருமாறு பணித்தார். அதன்படி கணங்கள் வடதிசை நோக்கிச் சென்ற பொழுது அவர்களுக்கு யானையே முதலில் தென்பட்டது.
அவர்கள் யானையின் தலையை வெட்டி எடுத்துச் சென்று இறைவனிடம் கொடுத்தனர். சிவபெருமான் அத்தலையை வெட்டுண்டு கிடந்த விநாயகரின் உடலில் வைத்து உயிர் கொடுத்தார். இதைக் கண்டு சாந்தமடைந்த தேவி மனம் மகிழ்ந்து விநாயகரை கட்டி அணைத்துக் கொண்டார். பின்பு சிவன், விநாயகருக்கு 'கணேசன்' என நாமம் சூட்டித் தமது கணங்களுக்கு தலைவராக நியமித்தார் என நாரத புராணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி விரதம்
விநாயகர் சதுர்த்தி விரதம் என்பது ஆவணி மாதம் சதுர்த்தியில் தொடங்கி புரட்டாசி மாதம் சுக்கிலபட்ச சதுர்த்தி வரை மேற்கொள்ளப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டை சுத்தம் செய்து வாசலில் மாவிலை தோரணங்கள் கட்டி அலங்கரிக்க வேண்டும். பின்பு பூஜையறையை மொழுகி கோலம் இட்டு அதன் நடுவில் வாழை இலையை விரித்து பச்சரிசியை பரப்ப வேண்டும். அந்த பச்சரிசியில் வலது மோதிர விரலால் பிள்ளையார் சுழி போட்டு 'ஓம்' என்று எழுதி, மண் பிள்ளையார் அல்லது பிள்ளையார் படத்தை வைக்க வேண்டும்.
விநாயகரை அருகம்புல், எருக்கம்புல், விபூதி, சந்தனம், மலர்கள் போன்றவற்றால் அலங்கரிக்க வேண்டும். பிறகு விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, மோதகம், தேங்காய், வெல்லம் கலந்த மாவு உருண்டை, அப்பம், அவல், பொரி, சுண்டல், எள்ளுருண்டை போன்றவற்றை படைத்து சாம்பிராணி காட்டி சூடம் ஏற்ற வேண்டும். அப்போது விநாயகருக்கான அகவல், மந்திரம், கவசம் பாடி வழிபட வேண்டும். `சதுர்த்தி விரதத்தை முறையாக கடைப்பிடிக்க உள்ளேன். அதனால் விரதம் முடியும் வரை எந்த தடைகளும் வராமல் இருக்க அருள்புரிய வேண்டும்' என்று பிரார்த்திக்க வேண்டும்.
மேலும் ஏழை, எளிய மக்களுக்கு வசதிக்கேற்றவாறு தானங்கள் செய்யலாம். அன்னதானம் வழங்கலாம். விநாயகர் விரதத்தை பக்தியுடன் கடைப்பிடிப்பவர்களுக்கு சிறந்த கல்வி அறிவும், தெளிந்த ஞானமும், செல்வ வளமும் கிடைக்கும். குடும்பத்தில் துன்பம் விலகி, இன்பம் பொங்கும்.
- மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக் கூடியது’ என்று பொருள்.
- விநாயகருக்கு முதன்முதலில் மோதகம் படைத்து, அவரது அருளை பெற்றவர் அருந்ததி தேவி.
ஓம்கார வடிவமாகவும், ஞானத்தின் வடிவமாகவும் திகழ்பவர் விநாயகப் பெருமான். விநாயகர் வழிபாட்டில் அவருக்கு படைக்கப்படும் உணவுகள் தனித்த இடத்தை பிடிக்கின்றன. உண்மையான பக்தியுடன் எதை படைத்தாலும் விநாயகப் பெருமான் ஏற்றுக்கொள்வார். இருப்பினும் அவருக்கு பிடித்தமான உணவுகளை படைத்து வழிபட்டால் நற்பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் விநாயகர் வழிபாட்டில் கொழுக்கட்டை, மோதகம், லட்டு, அப்பம், அவல், பொரி, கடலை, சுண்டல் ஆகியவை தவிர்க்க முடியாத இடத்தை பிடிக்கின்றன.
பிள்ளையாருக்கு பல விதமான நைவேத்தியங்கள் படைக்கப்பட்டாலும், அதில் முதன்மை இடத்தை பிடிப்பது மோதகம் தான். வீட்டில் பூஜிக்கப்படும் விநாயகர் கையில் மோதகம் இருக்க வேண்டும் என்பார்கள். மோதகம் என்பது தேங்காய், வெல்லப்பாகு, அரிசி மாவு ஆகியவற்றை சேர்த்து செய்யப்படும் பதார்த்தம் ஆகும். விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு மோதகம் படைத்து வழிபட்டால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம். விநாயகருக்கு மோதகம் நைவேத்தியமாக படைப்பதற்கு முக்கியமான காரணம் உண்டு.
மோதகம் என்றால் மோதக் + அகம் ஆகும். மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு 'வழங்கக் கூடியது' என்று பொருள். மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் வழங்கக் கூடிய பொருள் என்பதால் மோதகத்தை விநாயகருக்கு படைத்து வழிபடுவது சிறப்பானதாகும்.
ஒரு சமயம் அத்ரி ரிஷியின் மனைவியான அனுசுயா, சிவன், பார்வதி, விநாயகர் ஆகியோரை விருந்திற்காக அழைத்திருந்தார். எந்த உணவை கொடுத்தாலும் விநாயகரின் பசியை போக்க முடியாது என்பதை புரிந்து கொண்ட அனுசுயா, இனிப்பு கலந்த மோதகத்தை சாப்பிடக் கொடுத்தார். மொத்தமாக 21 மோதகங்களை விநாயகருக்கு அளித்தார். அதை சாப்பிட்டதும் விநாயகப் பெருமானின் பசி முழுவதுமாக நீங்கி, மகிழ்ச்சி அடைந்தார்.
இதைக் கண்ட பார்வதி தேவி, அனுசுயாவை போல் எவர் ஒருவர் விநாயகருக்கு மோதகம் படைத்து வழிபடுகிறார்களோ அவர்களின் விருப்பங்கள் அனைத்தையும் விநாயகப்பெருமான் நிறைவேற்றி வைப்பார் என வரம் அளித்தார். பார்வதி தேவி அளித்த வரத்தின் படி, பக்தர்கள் தாங்கள் விநாயகரிடம் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறுவதற்காக மோதகத்தை நைவேத்தியமாக படைக்கிறார்கள்.
விநாயகருக்கு முதன்முதலில் மோதகம் படைத்து, அவரது அருளை பெற்றவர் அருந்ததி தேவி என்று கூறப்படுகிறது. கற்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்து, வானில் இன்றும் விண்மீனாய் வலம் வருபவர் வசிஷ்டரின் மனைவியான அருந்ததி. புண்ணிய பலன் காரணமாக ஒருமுறை வசிஷ்டரின் ஆசிரமத்துக்கு விஜயம் செய்தார் விநாயகர். அவர் வருவதை அறிந்த அருந்ததி, அவருக்காக புதிய நைவேத்தியம் செய்ய விரும்பினார்.
விநாயகப் பெருமான், அண்டத்தின் எல்லா இடங்களிலும் நிறைந்து இருப்பவர். இதனால் அண்டத்தை உணர்த்தும் விதமாக வெள்ளை மாவினால் 'செப்பு' எனும் மேல் பகுதியை செய்தார். அண்டத்தின் உள்ளே பூரணமாக நிறைந்திருக்கும் விநாயகரை உணர்த்தும் விதமாக, இனிப்பான பூரணத்தை மாவுக்குள்ளே வைத்து மோதகத்தை தயார் செய்தார். பின்பு வசிஷ்டரிடம் அதைக் கொடுத்து விநாயகருக்கு படைத்தார்.
அப்படி அவர் அளித்த பிரசாதத்தின் தத்துவச் சிறப்பை உணர்ந்த பிள்ளையார், அதை உலகுக்கு உணர்த்தும் விதமாக, மோதகத்தை எப்போதும் தன் திருக்கரங்களில் ஏந்திக் கொண்டிருக்கிறார். அருந்ததி மூலம் நமக்குக் கிடைத்த அந்த அருள் பிரசாதத்தைப் போன்றே, விநாயகர் சதுர்த்தியான இன்று நம் வாழ்வும் இனிப்பும் தித்திப்புமாகப் பூரணத்துவம் பெற பிள்ளையாரை வழிபட்டு வரம் பெறுவோம்.






