செய்திகள்
கார் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியை அடுத்து நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள இடைச்செவல் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அய்யலுசாமி (வயது 60), விவசாய கூலி தொழிலாளி. தற்போது நாலாட்டின்புதூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் அய்யலுசாமி நேற்று காலை நாலாட்டின்புத்தூரில் இருந்து மொபட்டில் இடைசெவலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கோவில்பட்டியில் இருந்து நெல்லையை நோக்கி வந்த கார், அவரது மொபட் மீது மோதியது. இதில் அய்யலுசாமி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துவிஜயன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி வந்த அரியலூர் மாவட்டம் ஜெயம் கொண்டானை சேர்ந்த ராஜேந்திரன் (40) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.