செய்திகள்
கைது செய்யப்பட்ட வேலன்.

மருமகளுடன் கள்ளத்தொடர்பு: முதியவர் அடித்துக்கொலை - மகன் கைது

Published On 2020-07-25 12:25 GMT   |   Update On 2020-07-25 12:25 GMT
பென்னாகரம் அருகே மருமகளுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த முதியவரை அடித்துக்கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
பென்னாகரம்:

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் எம்.கே. நகரை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 75). இவருக்கு 6 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி இறந்து விட்டதால் முனியப்பன் மட்டும் தனியாக வசித்து வந்தார். தற்போது கடந்த 2 ஆண்டுகளாக 4-வது மகனான வேலன்(45) என்பவருடைய வீட்டில் தினமும் சாப்பிட்டு விட்டு தனியாக குடிசையில் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் வேலனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு மது குடித்து விட்டு முனியப்பன் தங்கி இருந்த குடிசைக்கு சென்று வேலன் தனது தந்தையிடம் தகராறு செய்துள்ளார். அப்போது தந்தை-மகனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த வேலன் கட்டையால் தனது தந்தையை அடித்துக்கொலை செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர் இரவு முழுவதும் அங்கேயே போதையில் கிடந்துள்ளார். நேற்று காலை வேலன் உறவினர்களிடம் சென்று தனது தந்தையை அடித்து கொன்று விட்டதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து பென்னாகரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு மேகலா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

பின்னர் முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தந்தையை அடித்துக்கொலை செய்த வேலனை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

எனது தாயார் இறந்த பின்னர் தந்தை முனியப்பன் தனியாக வசித்து வந்தார். எனக்கு குழந்தை இல்லை என்பதால் அவரை என் வீட்டுக்கு வந்து விடுமாறு கூறினேன். அதன்படி கடந்த 2 ஆண்டுகளாக எனது வீட்டில் அவர் சாப்பிட்டு வந்தார். அப்போது எனது மனைவிக்கும், தந்தைக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை அறிந்த நான் மனைவி மற்றும் தந்தையை கண்டித்தேன். ஆனால் அவர்கள் கள்ளத்தொடர்பை கைவிடவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த நான் குடிபோதையில் எனது தந்தையை கட்டையால் அடித்துக்கொலை செய்தேன். பின்னர் போதையில் அங்கேயே இரவு முழுவதும் படுத்து கிடந்தேன். நேற்று காலை நடந்த சம்பவம் குறித்து எனது உறவினர்களிடம் தகவல் தெரிவித்தேன் என்று கூறி உள்ளார். குடிபோதையில் தந்தையை பெற்ற மகனே அடித்துக்கொன்ற இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News