செய்திகள்
கைதான மாயாண்டி, தமிழரசி,

நாமக்கல், திருச்செங்கோடு பகுதிகளில் 20 கிலோ கஞ்சா பறிமுதல் - 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது

Published On 2020-07-21 12:32 GMT   |   Update On 2020-07-21 12:32 GMT
நாமக்கல், திருச்செங்கோடு பகுதிகளில் 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 2 பெண்கள் உள்பட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனிப்படை போலீசார் கடந்த 17-ந் தேதி நாமக்கல் மாரிகங்காணி தெருவை சேர்ந்த மாயாண்டி என்பவரின் மனைவி புவனேஸ்வரியை (வயது38) கைது செய்தனர். அவரிடம் இருந்து 9½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது கணவர் மாயாண்டி (43), மாயாண்டியின் மற்றொரு மனைவி தமிழரசி (40) ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். 

அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் மாயாண்டி கொடுத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் திருச்செங்கோடு கைலாசம்பாளையம் நான்குரோடு பஸ்நிறுத்தம் அருகில் சூரியம்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மனைவி பேபி (35) என்பவரை கைது செய்தனர். 

அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு விற்பதற்காக வைத்திருந்ததாக கூறினார். மேலும் பேபி யாரிடம் இருந்து கஞ்சாவை வாங்குகிறார் என ரகசியமாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த ஒட்டுமொத்த வியாபாரியையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கைதான 3 பேரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 20 கிலோ கஞ்சாவின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News