செய்திகள்
வீடு புகுந்து கொள்ளை

திருப்பூர் சாமுண்டிபுரத்தில் தொழிலாளி வீட்டில் நகை திருட்டு

Published On 2020-07-18 13:19 GMT   |   Update On 2020-07-18 13:19 GMT
திருப்பூர் சாமுண்டிபுரத்தில் தொழிலாளி வீட்டில் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனுப்பர்பாளையம்:

திருப்பூர் சாமுண்டிபுரத்தை அடுத்த சத்யாநகர் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது 37). தையல் தொழிலாளி. சம்பவத்தன்று இரவு மகேஸ்வரி தனது மகனுடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அதிகாலை 2.30 மணிக்கு திடீரென எழுந்த மகேஸ்வரி வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் பீரோவின் உள்ளே பார்த்த போது அதில் இருந்த சங்கிலி, கம்மல், மோதிரம் உள்பட 5½ பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து மகேஸ்வரி 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் சம்பவத்தன்று இரவு மகேஸ்வரி வீட்டுக் கதவை பூட்டாமல் தூங்கியதாகவும், பீரோவை பூட்டி சாவியை தனது அருகில் வைத்து படுத்ததாகவும் தெரிவித்தார். மேலும் வீட்டிற்குள் சென்ற மர்ம ஆசாமி மகேஸ்வரி அருகில் வைத்திருந்த பீரோ சாவியை எடுத்து திறந்து, அதில் இருந்த நகைகளை திருடி சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News