செய்திகள்
தண்டராம்பட்டு அருகே குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
தண்டராம்பட்டு அருகே குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தண்டராம்பட்டு:
தண்டராம்பட்டு அருகே உள்ள மேல்கரிப்பூர் கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த ஒரு வாரமாக அந்த பகுதியில் குடிநீர் சரிவர வினியோகம் செய்யப்படவில்லை என்றும், இதுபற்றி ஊராட்சி மன்றத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை 8.30 மணி அளவில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர்.
அதைத் தொடர்ந்து தண்டராம்பட்டு செல்லும் சாலையில் அமர்ந்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் சாத்தனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியலின் போது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து எந்த அதிகாரிகளும் பொதுமக்களை சந்திக்க வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.