செய்திகள்
நெல்லையில் தடையை மீறி இயக்கப்பட்ட ஆட்டோக்களுக்கு அபராதம்
நெல்லையில் தடையை மீறி இயக்கப்பட்ட ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பயணிகளை ஏற்றிச்சென்ற ஒருசில ஆட்டோக்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
நெல்லை:
கொரோனா பரவலை தடுக்க 4-வது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், அந்தந்த மாவட்டங்களுக்குள் வாகனங்களை இயக்க இ-பாஸ் தேவையில்லை என்று தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது.
அதே நேரத்தில் ஆட்டோ போன்ற வாடகை வாகனங்களை அத்தியாவசிய, அவசர தேவைகளுக்கு மட்டுமே இயக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் நேற்று ஊரடங்கு தளர்வு என்ற பெயரில் அனைத்து வாகனங்களும் இயக்கப்பட்டன.
இதையொட்டி நெல்லையில் போலீசார் ஆட்டோக்களை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுத்தனர். நெல்லை வண்ணார்பேட்டையில் ஆட்டோக்கள் வரிசையாக வந்தன. அவற்றை நிறுத்திய போலீசார் அபராதம் விதித்தனர். இவ்வாறு 100-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பயணிகளை ஏற்றிச்சென்ற ஒருசில ஆட்டோக்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.