செய்திகள்
தாக்குதல்

திருவோணத்தில் இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் மீது தாக்குதல்- 4 பேர் மீது வழக்கு

Published On 2020-05-10 12:56 GMT   |   Update On 2020-05-10 12:56 GMT
திருவோணத்தில் இந்து முன்னணி ஒன்றிய செயலாளரை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவோணம்:

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே உள்ள காரியா விடுதி நடுத்தெருவை சேர்ந்தவர் ரங்கசாமி மகன் கோவிந்தராஜ் (வயது 49). இவர் இந்து முன்னணி திருவோணம் ஒன்றிய செயலாளராக உள்ளார்.

சம்பவத்தன்று இவரது வீட்டின் முன்பு அதே பகுதியை சேர்ந்த முத்துக் குமார் (27), வீரகுமார் (24), அஜித், மகேஷ் ஆகிய 4 பேர் பேசி கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதை கண்ட கோவிந்தராஜ், ஏன் எனது வீட்டு வாசலில் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்-? என் குழந்தைகள் தூங்கிக் கொண்டிருக்கின்றன. இங்கிருந்து கலைந்து செல்லுங்கள்  என்று கூறினார். 

இதில் முத்துகுமார் உள்ளிட்ட 4 பேரும் ஆத்திரம் அடைந்து கோவிந்தராஜை சரமாரியாக தாக்கினர். தடுக்க வந்த அவரது மனைவி சங்கீதாவையும் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த கோவிந்தராஜ் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து திருவோணம் போலீஸ் நிலையத்தில் கோவிந்தராஜ் புகார் செய்தார். அதன்பேரில்  போலீசார் முத்துகுமார், அஜித், வீருகுமார், மகேஷ் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளதா? என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர். இந்து முன்னணி ஒன்றிய  செயலாளர் தாக்கப்பட்ட சம்பவம்  திருவோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
Tags:    

Similar News