செய்திகள்
தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்

ரிசர்வ் வங்கியின் முயற்சியால் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் - ஜி.கே.வாசன் அறிக்கை

Published On 2020-04-18 07:52 GMT   |   Update On 2020-04-18 07:52 GMT
ரிசர்வ் வங்கி, தேசிய வீட்டு வசதி வங்கி உள்ளிட்ட வங்கிகளின் மூலமாக ரு. 50,000 கோடிக்கு கடன் உதவி வழங்க எடுத்த முயற்சியால் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை:

தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கொரோனாவால் தொழில்கள் பாதிக்கப்பட்டு, ஏற்றுமதியானது 34.5 சதவீதம் சரிவை சந்தித்து, அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பில் மாநில அரசுகள் 60 சதவீதம் கடனுதவி பெறுவதற்கு, பணப்புழக்கத்தை அதிகரிக்க, நிதிச்சுமையை குறைக்க, தொழில்களில் ஏற்பட்டுள்ள சுமையைக் குறைக்க, பொருளாதாரம் வளர்ச்சி பெற உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம் பெற்றிருப்பது நாட்டு மக்களின் சிரமத்தைக் குறைப்பதோடு தொழில்களையும், பொருளாதாரத்தையும் படிப்படியாக உயர்த்தும்.

நாடு முழுவதும் கொரோனா தாக்கத்தால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதை கவனத்தில் கொண்ட ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஏற்கனவே சலுகைகளை அறிவித்தது பயன் தருகிறது. அதாவது ஊரடங்கு முதலில் அமல்படுத்தப்பட்ட போது சிறு குறு தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் வங்கி சம்பந்தமான சலுகைகளை அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்தார்கள். அதற்கேற்ப வங்கித் தவணைக்கான சலுகைகள், வட்டி குறைப்பு உள்ளிட்ட சலுகைகளை ரிசர்வ் வங்கி அறிவித்தது.

இந்நிலையில் தொழில்கள் மேலும் பாதிக்கப்படுவதால் பல்வேறு சலுகைகளை அனைத்து தரப்பு மக்களும் ரிசர்வ் வங்கியிடம் எதிர்பார்த்தனர். இதன் பிரதிபலிப்பாக நேற்றைய தினம் ரிசர்வ் வங்கி ஆளுநர் வெளியிட்ட அறிவிப்பில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில் நபர்டு, சிறு நிறுவனங்கள் மேம்பாட்டு வங்கி, தேசிய வீட்டு வசதி வங்கி உள்ளிட்ட வங்கிகளின் மூலமாக ரு. 50,000 கோடிக்கு கடன் உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார். எனவே நாட்டு மக்களிடையே பணப் புழக்கத்தை அதிகரிக்கவும், நிதிச்சுமையைக் குறைக்கவும், பொருளாதாரத்தை வளர்ச்சி பெறச்செய்யவும் ரிசர்வ் வங்கி மேற் கொள்ளும் முயற்சிகள் மென்மேலும் பலன் தரும்.

கொரோனாவால் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பையும், நாட்டின் பொருளாதார பாதிப்பையும் கவனத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கும் சலுகைகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் தரும்.

அதாவது கடந்த மாத இறுதியில் பொது மக்களுக்கு ரூ. 1.7 இலட்சம் கோடி மதிப்பிலான பொருளாதாரச் சலுகைகளை அறிவித்ததோடு நீட்டிக்கப்பட்ட ஊரடங்கினால் தொழில்கள் மேலும் பாதிக்கப்படுகின்ற சூழலில் மீண்டும் பொருளாதாரச் சலுகையை அளித்திருப்பதும், ரிசர்வ் வங்கியிடம் இருந்து மாநில அரசுகள் பெற்று வந்த 30 சதவீத கடனுதவி 60 சதவீதம் வரை பெறுவதற்கு அனுமதி அளித்திருப்பதும் வரவேற்கத்தக்கது.

எனவே கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆதரவும், சலுகைகளும் அளித்திருக்கிற மத்திய அரசு தமிழகத்துக்கான நிதியையும் உடனே வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News