செய்திகள்
கோவிலாங்குளம் அருகே வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது
கோவிலாங்குளம் அருகே வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி அருகே உச்சிநத்தம் பாலம் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசுவரன் ஆகியோர் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் நின்றிருந்த 3 பேர் போலீசாரை கண்டதும் தாங்கள் கையில் வைத்திருந்த பையை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடினர். போலீசார் அதை எடுத்து பார்த்த போது அதில் 20 கிலோ 700 கிராம் கஞ்சா, ஒரு வாள் ஆகியவை இருந்தது. தொடர்ந்து போலீசார் மர்ம நபர்களை விரட்டி சென்ற போது, அதில் ஒருவனை மடக்கி பிடித்தனர்.
மற்றொருவர் உச்சிநத்தம் பாலத்தில் இருந்து கீழே குதித்தார். ஆனால் போலீசார் அவரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது 3-வது நபர் தப்பியோடி தலைமறைவானார். பிடிபட்டவர்களிடம் விசாரித்ததில் எம்.கரிசல்குளம் தனியான்கோட்டம் பகுதியை சேர்ந்த கந்தன் மகன் பழனிநாதன்(வயது 28), கருப்பையா மகன் முத்துக்குமார்(23) என்பது தெரிந்தது.
பழனிநாதன் பாலத்தில் இருந்து கீழே குதித்ததில் அவருக்கு கால்முறிவு ஏற்பட்டது. இவர் கடந்த பிப்ரவரி 27-ந்தேதி கோவிலாங்குளம் அருகில் கொம்பூதி விலக்கு ரோட்டில் வேலாயுதம் என்பவரது மகன் நேதாஜி(21) என்பவர் சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2 பேருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், தப்பியோடிய மற்றொருவரை தேடி வருகின்றனர்.