நாங்குநேரி அருகே அரசு பஸ் மோதி ஜோதிடர் பலி
களக்காடு:
சங்கரன்கோவில் மேலரதவீதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 37). ஜோதிடர். செல்வம் மற்றும் அவரது உறவினர் சண்முகசுந்தரம், செல்வத்தின் நண்பர் முகம்மது ஆகிய 3 பேரும் மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு நாகர்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். பைக்கை முகம்மது ஓட்டினார்.
நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு ரெயில்வே பாலத்தில் பைக்கை நிறுத்தினர். அப்போது பைக்கில் இருந்து இறங்கி ரோட்டில் நடந்து சென்ற போது பின்னால் நாகர்கோவில் நோக்கி வந்த அரசு பஸ் செல்வத்தின் மீது மோதியது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபற்றி மூன்றடைப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் நாகர்கோவில் ராணி தோட்டத்தை சேர்ந்த குமாரசாமி மகன் ரமேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.