முத்துப்பேட்டை அருகே மீன் பிடிக்க சென்ற மீனவர் கடலில் தவறி விழுந்து பலி
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை கொல்லக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் காசிநாதன்(55) மீனவரான இவருக்கு திருமணமாகி ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். குழந்தைகள் ஏது மில்லை.
இந்தநிலையில் மீனவர் காசிநாதன் வழக்கம்போல் நேற்று காலை சகமீனவர்களுடன் படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். அப்பொழுது அலையாத்திக் காடுகள் நிறைந்த லகூன் அருகே உள்ள கடல் முகத்து வாரம் வெள்ளை தள்ளி என்ற பகுதி அருகே நின்று வலையை விரித்து காசிநாதன் மீன்பிடித்துக்கொண்டு இருக்கையில் திடீரென்று தடுமாறி கடலில் விழுந்து மூழ்கி கடல்நீர் மற்றும் சேற்றில் சிக்கி பலியானார், அப்பொழுது காசிநாதனை காணாததை கண்டு மீன் பிடித்துக்கொண்டிருந்த கூட வந்த மீனவர்கள் தேடி பார்த்தபோது அங்கு தண்ணீரில் மூழ்கி பலியாகி இருந்ததை கண்டனர்.
இதனையடுத்து பலியான மீனவரின் உடலை கரைக்கு கொண்டு வந்து முத்துப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் விசாரணை செய்து பலியான மீனவர் காசிநாதன் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனை செய்ய திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த முத்துப்பேட்டை போலீசார் விசாரணை மேற் கொண்டுள்ளனர். இந்த நிலையில் கடலில் தவறிவிழுந்து மீனவர் பலியான சம்பவம் முத்துப்பேட்டை பகுதி மீனவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.