கம்பம் பஸ் நிலையத்தில் மரக்கிடங்கில் திடீர் தீ விபத்து
கம்பம்:
கம்பம் புதிய பஸ் நிலையம் அருகே போஸ் என்பவருக்கு சொந்தமான மரக்கிடங்கு உள்ளது. இதன் அருகிலேயே அவரது பர்னிச்சர் கடையும் உள்ளது. இன்று காலையில் கடையில் இருந்து புகை வந்தது.
உடனே அருகில் இருந்த நபர்கள் இது குறித்து கம்பம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் கடைக்குள் இருந்து தீ மளமளவென பரவி அந்த சாலை முழுவதும் கரும் புகையாக காட்சி அளித்தது. இதனால் உத்தமபாளையம், போடி, தீயணைப்பு நிலையத்தில் இருந்தும் வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்க போராடினர். இருந்தபோதும் மரக்கிடங்கு மற்றும் பர்னிச்சர் கடையில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது.
கடை அருகே டாஸ்மாக் உள்ளதால் இரவு நேரத்தில் போதையில் யாரேனும் தீ வைத்து சென்றார்களா? அல்லது மின் கசிவால் தீ விபத்து நடந்ததா? என தெரியவில்லை. இது குறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.